Wednesday, May 31, 2017

மாடுகள்..... அரசுகள்..... போராட்டங்கள்!

          இந்திய நாட்டின் வரலாற்றில் மாடுகளை முதன்மைப்படுத்திய கிளர்ச்சிகளும் போராட்டங்களும், அவை ஏற்படுத்திய மாற்றங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. மனு நீதிச் சோழன் என்னும் சோழ மன்னன், கன்றை அரண்மனைத் தேரில் பலி கொடுத்த ஒரு பசுவின் குற்றச்சாட்டுக்குத் தலை வணங்கி, தனது மகனையே தேர்க்காலில் பலி கொடுத்து நீதியை நிலை நாட்டினான். (இது destruction. இரு தரப்புக்குமே நஷ்டம். மன்னன் வேறு ஏதேனும் செய்திருக்கலாம்.) இச்சம்பவம் தமிழர்கள் பின்பற்றிய நீதிமுறை மற்றும் சமுதாயச் சமநிலைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக அனைவராலும் போற்றப்படுகிறது.

மனு நீதிச் சோழன் 

                   இதெல்லாமே இருந்தாலும் 'இந்தியாவின் முதல் சுதந்திரப் போர்' என்று அழைக்கப்படும் மீரட் புரட்சி, மாட்டினை முன்னிறுத்தி நடந்த புரட்சியே. மீரட் புரட்சிக்கு (1857 ஆம் ஆண்டு) முன்னோடியாகவும் காரணமாகவும் இருந்தது தமிழகத்தில் நடந்த (1806 ஆம் ஆண்டு) வேலூர் சிப்பாய்க் கலகம் தான். அது பற்றி வேறு பதிவில் பார்க்கலாம்.

                       ஆங்கில அரசாங்கம் இந்தியச் சிப்பாய்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி கொடுத்துத் தங்கள் படை பலத்தைப் பெருக்கினார்கள். அப்போது பிரிட்டிஷ் படையில் இந்துக்களும் முஸ்லிம்களும் மட்டுமே படை வீரர்களாக இருந்தனர். படை வீரர்கள் துப்பாக்கியைக் கையாளும் போது அவர்களது வலது கையால் துப்பாக்கி ட்ரிக்கரைப் பிடித்திருப்பார்கள்; இடது கை துப்பாக்கியைத் தாங்கிப் பிடிப்பதற்கும் தோட்டாக்களை மாற்றுவதற்கும் பயன் படும்.


                  ஒரு கையால் தோட்டா மாற்ற இயலாது. தோட்டாக்கள் ஒரு வித வழவழப்பான பசைப்பொருள் (கிரீஸ்) தடவப்பட்டு, உறையில் இடப்பட்டிருக்கும். அந்த கிரீஸ் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பினால் செய்யப்பட்டிருந்ததாக இருந்தது. தோட்டாவின் மேலிருக்கும் உரையைப் பற்களினால் மட்டுமே கடித்துத் திறக்க முடியும். அப்படித் திறக்கும் போது அந்த கிரீஸ் வாயில் படும் என்பதால் இந்து மற்றும் முஸ்லிம் சிப்பாய்கள் அந்தத் துப்பாக்கிகளைப் பயன்படுத்த மறுத்தனர். (இந்துக்களுக்கு மாடு தெய்வம்; முஸ்லிம்களுக்கு பன்றி வெறுப்புக்குரிய விலங்கு.) இது பெரிய எதிர்ப்பாக மாறி, மிகப்பெரும் கிளர்ச்சியாக உருவெடுத்தது. அது தான் மீரட் சிப்பாய்க் கலகம் என்று பெயர் பெற்றது.

மீரட் புரட்சி (1857)

                             அடுத்து, 'தை எழுச்சி', 'மெரீனா புரட்சி' என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் சுய எழுச்சிப் போராட்டம். ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி, ஜனவரி 23 ஆம் தேதி வரை தொடர்ந்த தமிழ் இளைஞர்களின் 'ஜல்லிக்கட்டு ஆதரவு மற்றும் நாட்டு மாட்டினங்களைக் காத்தல்' போராட்டம், சமீப காலத்தில் மாடுகளை முன்னிறுத்திச் செய்யப்பட பெரும் போராட்டமாகும்.

நாட்டு மாடு 

                சிறிய பேரணியாகத் தொடங்கிய இந்தப் போராட்டம் லட்சக்கணக்கான மக்களைத் தானாக ஒருங்கிணைத்து, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவி, மிகப்பெரும் மக்கள் இயக்கமாக மாறியது. இந்தப் போராட்டத்தினைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்ந்து நடத்தப்படவும் 'விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில்' திருத்தங்கள் கொண்டு வரவும் மத்திய மாநில அரசுகள் ஆவண செய்தன.

தை எழுச்சிப் போராட்டம் 
                           மாட்டினை முன்னிறுத்திய நிகழ்வுகளும் போராட்டங்களும் நாட்டிற்குப் புதிது அல்ல. பார்ப்போம்.
                         
#மாடுகள் #போராட்டம் #மீரட்புரட்சி #சுதந்திரப்போராட்டம்