Wednesday, November 8, 2017

சகுனங்கள் எல்லாம் இயற்கை தரும் செய்திகள்!

            அன்றாட வாழ்வில் சகுனம் பார்ப்பதைப் பலர் கடைப்பிடிக்கிறோம். பகுத்தறிவாளர்கள் இதை மூட நம்பிக்கை என்று கூறுகிறார்கள் - இதில் ஒரு கலையும் அறிவியலும் இருப்பது புரியாமல்!

               மனிதர்கள் நமக்குத் தெரிந்த மொழிகளால் பேசுகிறோம். சொல்பவரின் மொழி கேட்பவருக்குத் தெரியவில்லை என்றால் சைகைகளால் தாங்கள் சொல்ல வந்ததைப் பகிர முயற்சி செய்வார்கள். சகுனங்களும் இது போலத்தான். நம்மைச் சுற்றி இருக்கும் விலங்குகள், பறவைகள், தாவரங்கள் எல்லாம் நம்மிடம் பேசுகின்றன.ஆனால் இவை மனிதர்களின் மொழியில் பேசுவதில்லை. மிருகங்களும், பறவைகளும் சைகை மொழியில் பேசுகின்றன; தாவரங்கள் சில விஷயங்களைக் குறிப்பால் உணர்த்துகின்றன. இவைகளையே சகுனங்கள் என்கிறோம்.

1. பூனை குறுக்கே சென்றால் காரியத்தடை:

        பொதுவாகவே நாய்கள் தங்கள் எஜமானர்களோடு மிகுந்த நன்றியுணர்வும் நட்புணர்வும் கொண்டவை. நாய்களுக்கு இருக்கும் ஒரு விசேஷமான அறிவைக் கொண்டு சில சமயம் தங்கள் எஜமானர்களுக்கு ஏற்படப் போகும் விபரீதங்களைக் கூட முன்னரே அறிந்து எச்சரிக்கக் கூடிய ஆற்றல் கொண்டவை.

பூனை

அது போலவே பூனைகள் தாங்கள் வாழும் வீட்டுடன் பற்று கொண்டவை. அவைகளின் மனம் எப்போதும் அந்த வீட்டில் நடக்கக் கூடிய நிகழ்வுகளைப் பற்றியே வட்டமிட்டுக் கொண்டிருக்கும். நாம் திட்டமிடும் காரியங்களைப் பற்றியும் அதில் இருக்கும் தடைகளைப் பற்றியும் அவை முன்கூட்டியே அறிகின்றன. நாம் புறப்படும் போது அந்தத் தடையை நமக்குச் சுட்டிக் காட்டித் தடுக்கும் பொருட்டே பூனை நமக்குக் குறுக்கே செல்கிறது. இன்றும் தென் மாவட்டங்களின் சில சமூகங்களில் பூனையை "வீட்டுச் சாமி" என்று அழைக்கின்றனர்.

2. பன்றிமேல் ஏற்றிய வண்டி ஆகாது; விற்றுவிட வேண்டும்:

              பன்றிகள் மனிதர்களின் ரகசியங்களுடன் தொடர்பு கொண்டவை; ஒரு வாகனத்துக்கு ஏற்படக் கூடிய விபத்தை அறியும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.

பன்றி
                     தங்களின் உயிரைக் கொடுத்து நமக்கு வரப்போகும் இன்னல்களைத் தெரிவிப்பவை பன்றிகள். அதனால் தான் பன்றி மேல் ஏறிய வாகனத்தை விற்று விடச் சொல்லும் பழக்கம் இருக்கிறது. அந்த வாகனத்தைப் புதிதாக வாங்குபவர்களுக்கு எந்தக் கெடுதலும் கிடையாது.

3. காகம் கரைந்தால் வீட்டுக்கு விருந்தாளி வருவர்:

               இதுவும் ஒரு விலங்குகளின் ஒரு விதமான அறிவும் அதைத் தொடர்ந்த சைகையும் தான்.

காகம்
                 தமிழ் ஜோதிடத்தில் பஞ்ச பட்சி சாஸ்திரம் என்று ஒன்று உண்டு. அந்த ஐந்து பறவைகளில் காகமும் ஒன்று. காகங்களுக்கு இருக்கும் உள்ளுணர்வும் நுண்ணறிவுமே வீட்டுக்கு வரும் விருந்தாளிகளைப் பற்றி நமக்கு சைகையில் உணர்த்த உதவுகிறது.

4.  வாழை மரம் வடக்கேஅல்லது கிழக்கே குலை தள்ளினால் நல்லது:

               மிருகங்கள், பறவைகள் போலவே தாவரங்களும் நம்முடன் உரையாடுகின்றன; வாழை மரம் வடக்கிலோ அல்லது கிழக்கிலோ குலை தள்ளுவது நல்லது என்பதும் வீட்டில், அல்லது அந்தப் பகுதியில் நடக்கப் போகும் நல்ல விஷயத்தைக் குறிப்பால் உணர்த்துவதாகவே இருக்கிறது.

குலை தள்ளிய வாழை மரம் 
                    இதுபோல் நம்மைச் சுற்றி நடக்கும் எல்லாவற்றிலும் நமக்கு எதோ செய்தி இருக்கிறது. புரிந்து தெளிவதில் தான் இருக்கிறது பகுத்தறிவு. ஒதுக்கித் தள்ளுவதில் இல்லை!