Monday, April 6, 2015

திருமாலின் தசாவதாரமும் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் (Thirumaal's Dasaavathaaram and the Theory of Evolution)

           இந்து சமயத்தின் பிரதான கடவுள்கள் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் பிரம்மா, மஹாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆவார்கள். இவர்களில் மஹாவிஷ்ணு என்று அழைக்கப்படும் திருமால் இதுவரை ஒன்பது அவதாரங்கள் எடுத்திருப்பதாகவும் பத்தாவது அவதாரமாக 'கல்கி' என்ற அவதாரத்தைக் கலியுகத்தில் எடுப்பார் என்றும் வேதங்கள் கூறுகின்றன. அதனால் திருமாலுக்கு 'தசாவதார மூர்த்தி' என்று பெயரிட்டுள்ளனர் இந்துக்கள். இந்தப் பத்து அவதாரங்கள் என்பவை வரிசையாக: மச்ச, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, ராம, பலராம, கிருஷ்ண மற்றும் கல்கி அவதாரங்களாகும். இந்தப் பத்து அவதாரங்களும் பரிணாம வளர்ச்சியின் பல்வேறு நிலைகளாக அமைந்திருக்கின்றன. ஒரு செல் உயிரினத்தில் ஆரம்பித்து ஆறறிவு பெற்ற மனிதன் வரையிலான பரிணாம வளர்ச்சியையே இந்து மதத்தில் 'திருமாலின் பத்து அவதாரங்கள்' என்று இந்து மதம் குறிப்பதாக உள்ளது.

திருமாலின் பத்து அவதாரங்கள் 
  1. மச்ச அவதாரமாகிய மீன் நிலை:
         பத்து அவதாரங்களிலும் முதன்மையான அவதாரம் இந்த மச்ச அவதாரம். சோமுகாசுரன் என்ற அசுரன் நான்கு வேதங்களையும் கடலில் வீச, வேதங்களைக் காக்க மச்சமாக (மீன்) அவதரித்தார் திருமால்.

மச்ச அவதாரம் 

                          மனித சிருஷ்டிக்கு அடித்தளமாக விளங்குபவை வேதங்கள் தான். உயிர்கள் படைக்கப் படுவது தொடர்வதற்காக முதன்முதலில் மீனாக அவதரித்தார் திருமால். 

மச்ச அவதார அமைப்பு 

             டார்வினின் பரிணாம வளர்ச்சித் தத்துவமும் உலகின் முதல் உயிர் நீரில் இருந்தே தோன்றியதாகக் கூறுகிறது. 'நீர் வாழ்வன' இனமான மீனாக மகாவிஷ்ணு முதல்  அவதாரம் எடுத்ததன் மூலம் பரிணாம வளர்ச்சித் தத்துவம் விளக்கப்பட்டுள்ளது.

        2. கூர்ம அவதாரமாகிய ஆமை நிலை:

கூர்ம அவதாரம் 
     ஒரு முறை தேவர்களும் அசுரர்களும் அமுதம் பெற வேண்டிப் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுக்க முயற்சி செய்தனர். அப்போது திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து, அந்த முயற்சிக்கு உதவி செய்தார். 
                   
கூர்ம அவதாரச் சிலை
            ஆமை என்பது நீர், நிலம் இரண்டிலும் வாழக் கூடியது.  பரிணாம வளர்ச்சியில் 'நீர் வாழ்வன' இனத்திலிருந்து 'நீர், நில வாழ்வன' இனத்திற்கு உயர்ந்த வளர்ச்சி நிலையை உணர்த்துகிறது.

         3. வராக அவதாரமாகிய பன்றி நிலை:
                   
வராக அவதாரம்
                  வராக (பன்றி) அவதாரம்  மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரமாகும். இரண்யாட்சகன் என்னும் அசுரன் பூமிப்பரப்பை சமுத்திரத்திற்குள் தூக்கி எறிந்துவிட்டு பாதாளத்தில் ஒளிந்து கொண்டான். மகாவிஷ்ணு பன்றியாக உருவம் எடுத்துப் பாதாளம் சென்று இரண்யாட்சகனுடன் போரிட்டு உலகத்தைக் காப்பாற்றினார்.

வராக அவதாரம் சிலை 
                    பன்றி என்பது நிலத்தில் வாழும்  உடையது.  பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் பொறுத்தவரை 'நீர் மற்றும் நில வாழ்வன' என்ற நிலையிலிருந்து 'நில வாழ்வன' என்ற நிலைக்கு உயர்ந்ததை வராக அவதாரம் குறிக்கிறது.

     4. நரசிம்ம அவதாரமாகிய மிருகமும் மனிதனும் சேர்ந்த நிலை:

                நரசிம்ம அவதாரம் திருமாலின் நான்காவது அவதாரமாகும். அது உடலின் மேல்பாதி சிங்கமும் இடுப்புக்குக் கீழே மனித உருவமும் கொண்ட அவதாரமாகும். 'பிரகலாதன்' என்ற தனது சின்னஞ்சிறு பக்தனைக் காக்க, அவனது தந்தையும் அசுர குலத்தின் அரசனுமான 'இரணியன்' என்ற அசுரனை வதம் செய்து தர்மத்தை நிலைநிறுத்திய அவதாரமே நரசிம்ம அவதாரமாகும்.

நரசிம்ம அவதாரம் 

              பரிணாம வளர்ச்சித் தத்துவத்தைப் பொறுத்த வரை 'நில வாழ்வன' இனத்தில் சிறிய விலங்கினமான (பன்றி) வராக இனத்தில் இருந்து அதன் மேல் நிலையான சிங்க இனத்திற்கு மாறி, பின்னர் மனிதனாக மாற ஆரம்பித்த நிலையைக் குறிப்பதே நரசிம்ம அவதாரமாகும்.

நரசிம்ம அவதாரம் சிலை 
                         பரிணாம வளர்ச்சியின் மிக முக்கியமான நிலையான மனித இனம் தோன்றுதல் இந்த அவதாரத்தில் இருந்து ஆரம்பிப்பதால் நரசிம்மர் பல இடங்களில் தனிப் பெரும் கடவுளாகக் கருதப்படுகிறார்.

     5. வாமன அவதாரமாகிய 'குள்ள மனிதன்' என்னும் நிலை:

                   வாமன அவதாரம் என்பது நான்கு அடி உயரம் உடைய குள்ள மனிதன் என்ற நிலை ஆகும். 

வாமன அவதாரம் 
                     தசாவதாரத்தில் இது ஐந்தாவது அவதாரமாகும். இந்த அவதாரத்தில் 'மகாபலி' என்ற  அசுரர் குலச் சக்கரவர்த்தி செய்த யாகத்திற்கு தானம் வாங்கும் பிராமணராய் வந்து மூன்று அடி நிலத்தைத் தானமாக வேண்டினார் மகாவிஷ்ணு. 

வாமன மூர்த்தி 
                        பிறகு அவர் விஸ்வரூபம் எடுத்த நிலையில் பூமியை ஒரு அடியாகவும் வானத்தை ஒரு அடியாகவும் அளந்து, மூன்றாவது அடியை மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவனுக்கு முக்தி கொடுத்து தருமத்தை நிலை நாட்டினார் திருமால் என்னும் மகாவிஷ்ணு.

வாமன அவதாரம் சிலை 

                   பரிணாம வளர்ச்சித் தத்துவத்தின் படி விலங்கு நிலையில் இருந்து மனித நிலைக்கு முழுவதுமாக மாறிய நிகழ்வுதான் வாமன அவதாரம். நரசிம்ம அவதாரத்தில் விலங்கும் மனிதனும் சேர்ந்த நிலை இருந்தது. வாமன அவதாரத்தில் முழு மனிதனாக மாறிய நிலை வந்து விட்டது.
 
படங்கள்: www......
Pictures Courtesy: www......

          (மீதமுள்ள ஐந்து அவதாரங்கள் அடுத்த பதிவில் தொடரும்.) 

#தசாவதாரம் #பரிணாம வளர்ச்சித் தத்துவம் #TheoryofEvolution


No comments:

Post a Comment