Friday, August 19, 2016

ஒலிம்பிக்ஸ்னா சரி... ஜல்லிக்கட்டுன்னா தப்பா?

             தற்போது ரியோ டி ஜெனீரோவில் ஒலிம்பிக்ஸ் நடந்து வருகிறது. ஒலிம்பிக்ஸ் என்பது இன்று ஒரு அனைத்துலகப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்டும் பெருமை செய்யப்பட்டும் வருகிறது. ஒலிம்பிக்சில் கலந்து கொள்வதும் பதக்கம் வெல்வதும் இன்று பெருமைக்குரிய விஷயங்கள். 
          ஒலிம்பிக்ஸ் முதன்முதலில் தோற்றுவிக்கப்பட்டது ஒரு மதச் சடங்காகத் தான். கி. மு. 776 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் முதலில் தடகள விளையாட்டுக்களை (ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல்) மட்டும் கொண்டிருந்தனவாம்.  நாளடைவில் மல்யுத்தம், குத்துச் சண்டை, குதிரையேற்றம், வில் வித்தை, ரதப் போட்டிகள் என்று ராணுவம் சம்பந்தப்பட்ட விளையாட்டுக்கள் சேர்த்துக் கொள்ளப் பட்டிருக்கின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டதன் நோக்கம் நாட்டின் சிறந்த வீரர்களை, குதிரைகளை, ரத ஓட்டிகளைத் தேர்ந்தெடுப்பதே ஆகும். அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிப்பதன் மூலம் தனது நாட்டின் ராணுவ பலத்தை அதிகரித்துக் கொண்டது ஒலிம்பிக்ஸின் பிறந்த நாடான கிரேக்க நாடு. 

புராதான ஒலிம்பிக்ஸ் 
     தமிழகத்திலும் மற்போர், வில்வித்தைப் போட்டிகள், தேரோட்டப் போட்டிகள், படகு ஓட்டப் போட்டிகள், மலையேற்றம், ஏறுதழுவுதல் (இன்றைய ஜல்லிக்கட்டு விளையாட்டு) என்று பல போட்டிகளும் பண்டைய காலத்தில் நடந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. இந்தப் போட்டிகளின் நோக்கமும் சிறந்த வீரர்களை, சிறந்தத் தேரோட்டிகளை, சிறந்த குதிரைகளை, சிறந்த காளைகளைத் தேர்ந்தெடுப்பது தான். அவ்வாறு தேர்ந்தெடுக்கப் பட்ட வீரர்களையும் குதிரைகளையும் படையில் சேர்ப்பது போல், ஜல்லிக்கட்டில் சிறப்பாகப் பங்கெடுத்த காளைகள் விவசாயம் சம்பந்தப் பட்ட சிறப்பான வேலைகளில் ஈடு படுத்தப்பட்டன. அந்தக் காளைகளின் சிறப்பை மனதில் கொண்டு அதன் இனங்களும் (கன்றுகளும்) சிறப்பாகப் பாதுகாக்கப் பட்டன. சிறந்த காளையினத்தைத் தேர்ந்தெடுத்துப் பாதுகாத்து, அந்த இனத்தைப் பெருக்கும் நோக்கம் தான் ஏறுதழுவுதலின் தத்துவமே.

புராதான ஜல்லிக்கட்டு
             ஒலிம்பிக்சும் நமது பண்டைய வீர விளையாட்டுக்களும் ஒரே ரகம் தான். இதில் ஒலிம்பிக்ஸ் சரி, நம் நாட்டுப் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு தவறா?
ஒலிம்பிக்ஸ்னா சரி, ஜல்லிக்கட்டுன்னா தப்பா?

        சரி... ஒலிம்பிக்சும் பல வருடங்கள் நடத்தப் படாமல் விடப்பட்டு, பிறகு மீண்டும் ஆரம்பிக்கப் பட்டு நடத்தப் படுவது தான். ஜல்லிக்கட்டும் தடைகளைத்  தாண்டும்.

#ஒலிம்பிக்ஸ் #ஜல்லிக்கட்டு #ஏறுதழுவுதல் #தமிழர்வீரம் #வீரவிளையாட்டு 


Friday, May 27, 2016

ஆயில்யம் நட்சத்திரப் பெண்கள் மாமியாருக்கு 'ஆகாதவர்கள்' இல்லை!

      தங்கள் பிள்ளைகளுக்குப் பெண் பார்க்கும் பெற்றோர் சில பெண்களை நட்சத்திரத்தின் அடிப்படையை மட்டுமே வைத்து நிராகரித்து விடுகிறார்கள். ஆயில்யம் நட்சத்திரம் அவற்றுள் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. "ஆயில்யம் நட்சத்திரப் பெண் மாமியாருக்கு ஆகாது" என்ற ஒரு பழமொழி(?)க்கான பாதி அர்த்தத்தை வைத்துக் கொண்டு முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால் தவறாக அர்த்தம் கொள்ளப் படும் பழமொழிகளில் இதுவும் ஒன்றாகும். ஆயில்யம் நட்சத்திரப் பெண்களைப் பற்றி ஜோதிட நூல்கள் எதிலும் தவறாகக் கூறப்படவில்லை.

         ஆயில்யம் நட்சத்திரம் புதனின் நட்சத்திரம். புதன் நுண்கலைகள், கணிதம், தர்க்க வாதம் (லாஜிக்காகப் பேசுவது), சிறந்த கல்வி இவற்றுக்கெல்லாம் அதிபதி ஆவார். இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் கலைகள், கணிதம், கல்வி போன்றவற்றில் இயற்கையாகவே திறமை உடையவர்களாக இருப்பார்கள். 

    'Creative Arts' எனப்படும் படைப்புக் கலைகளில் ஒன்றான சமையல் கலையில் ஆர்வம் மிக்கவர்களாகவும் திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்; வீட்டை அழகாகப் பராமரிப்பார்கள்; குடும்பத்தின் கணக்கு வழக்குகளில் ஆர்வம் காட்டுவார்கள்;  கேள்வி கேட்பார்கள். இந்தப் பெண்ணின் திருமணத்திற்கு முன் இந்த உரிமைகள் எல்லாம் அவள் மாமியாரின் கையில் அதுவரை இருந்திருக்கும்.  






     ஆகவே ஆயில்யம் நட்சத்திரப் பெண்கள் சமையலறை உரிமையை எடுத்துக் கொள்வது, கணக்கு வழக்குகளில் கேள்வி கேட்பதெல்லாம் மாமியாருக்குப் பிடிக்காது. ஆகவே "ஆயில்யம் நட்சத்திரப் பெண்ணைக் கண்டாலே மாமியாருக்கு ஆகாது (பிடிக்காது)" என்ற கருத்து தான் இவ்வாறு வேறு ஒரு தவறான அர்த்தத்தைக் கொடுக்கிறது. 


      இதற்குப் பரிகாரம் சொல்வதாக ஒன்றைச் சொல்லுவார்கள். "மாமியார் இல்லாத வீட்டிலே கொடுத்தால் இந்தப் பெண்கள் மகாராணியாக வாழ்வார்கள்" என்பார்கள். அதுவும் உண்மை தான். குடும்பத்தின் தலைமையை ஏற்று நடத்த ஒரு பெண் இல்லாத வீட்டிற்கு இந்த நட்சத்திரப் பெண்கள் கிடைப்பது அவர்களுக்கும் அதிர்ஷ்டம்; அந்தப் பெண்ணுக்கும் அதிர்ஷ்டம் தான். 


         இது போன்ற தவறான கருத்துக்களால் தாமதத் திருமணம் இந்த நட்சத்திரப் பெண்களுக்கு நடக்கின்றன. இருந்தாலும் மன வலிமையோடு இவர்கள் இருக்கக் காரணம் ஆயில்யம் நட்சத்திரம் அமைந்திருக்கும் ராசி கடகம். அந்த ராசியில் இருக்கும் சந்திர பகவான் ஆட்சி பெற்று இருப்பதால் மன உறுதி மிக்க பெண்களாக இவர்களைப் படித்திருக்கிறார் இறைவன். அவர் படைப்பில் அனைத்திற்கும் அர்த்தம் உண்டு.

#ஆயில்யம்நட்சத்திரம், #வரன், #மாமியார் 

Wednesday, April 13, 2016

துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 


தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

         அனைவருக்கும் பூந்தோட்டத்தின் துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வியாழக்கிழமை பிறக்கும் இந்த ஆண்டு  குரு அருளும் திரு அருளும் பெற்ற சிறந்த ஆண்டாக இருக்க இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இந்த ஆண்டின் ராஜாவாக சுக்கிரன் இருப்பதால் விவசாயிகளுக்குப் பொன்னான ஆண்டாகவும், மந்திரியாகவும் சேனாதிபதியாகவும் புதன் பதவி வகிக்கப் போவதால் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நல்ல ஆண்டாகவும் இருக்கும். சுபம்!

#துன்முகி #துர்முகி #புத்தாண்டுவாழ்த்துக்கள்

Monday, March 28, 2016

ஜோதிடம் - அர்த்தமும் விளக்கமும்.

             ஜோதிடம் என்பது பலரும் தங்கள் வாழ்க்கையின் முக்கியமான நேரங்களில் பார்க்க நினைக்கும் விஷயம். ஒருவரின் பிறந்த நேரத்தைக் கொண்டு, அப்போது இருந்த கிரக நிலைகளை ஆராய்ந்து தற்கால பலன்களை ஜோதிடர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது மட்டுமே ஜோதிடம் என்று நினைத்தால் அதில் உண்மை இல்லை. வானில் உலவும் கிரகங்களை மட்டுமே வைத்துப் பலன் கூறுவது மட்டுமே ஜோதிடம் இல்லை. அந்தக் கலையின் (அல்லது அறிவியலின்) பெயர் வான சாஸ்திரம் அல்லது வானவியல் அல்லது வானியல் ஆரூடம்.  இன்றைய நவீன வானவியல், செயற்கைக் கோள் துணை கொண்டு ஆராய்ந்து கூறும் அதே விஷயங்களை இந்து மதம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே விளக்கி விட்டது. 

அறிவியல் காட்டும் கிரகங்களின் அமைப்பு 

இந்துக் கோவில்களின் நவகிரக அமைப்பு 

                       சரி. இப்போது நாம் கூற வருவது அது அல்ல. ஜோதிடம் என்றால் என்ன என்பதைத் தான் நாம் விளக்க முற்படுகிறோம். நாம் மேலே பார்த்த வான சாஸ்திரம் ஜோதிடத்தின் ஒரு பகுதி மட்டுமே. வான சாஸ்திரம் போலவே - சகுனங்கள், உடற்கூறு லட்சணம், தீர்க்க தரிசனம், வாஸ்து சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம், மருத்துவம், வானிலை, பட்சி சாஸ்திரம் என்று பல பிரிவுகளை உள்ளடக்கியது தான் ஜோதிடம் என்னும் க(டல்)லை. ஒரு தேர்ந்த ஜோதிடரிடம் மேற்கண்ட அனைத்து விஷயங்களிலும் தன்னை நாடி வரும் மனிதர்களின் சந்தேகங்களுக்கு விடைகள் இருந்தன. 

ஜோதி

                        'ஜோதி இருக்கும் இடம்' என்பதையே 'ஜோதிடம்' என்று அந்தக் கால மக்கள் அழைத்தனர். சில கேள்விகளும் சந்தேகங்களும் ஒருவரை இருளில் வைத்திருக்கும் போது ஒளி என்னும் ஜோதியைத் தேடிச் செல்லும் வேலையைத் தான் 'ஜோதிடம் பார்த்தல்' என்று அழைத்திருக்கிறார்கள். பொதுவாக இருட்டில் இருக்கும் மக்கள் தான் ஜோதியைத் தேடிச் செல்ல வேண்டும். ஜோதி அவர்களைத் தேடி வராது. 
             
            (ஆனால் இன்றைய ஜோதிடம் நவீனமாகி, தன்னுடைய இதர பிரிவுகளை இழந்து வான சாஸ்திரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இருக்கிறது. உண்மையில் ஜோதிடத்தின் ஒவ்வொரு பிரிவும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையது. உடல் கூற்றியல், வான சாஸ்திரம், மருத்துவம் என்று அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையே.)


#jothidam, #ஜோதிடம் #தமிழ்ஜோதிடம் 

Monday, March 21, 2016

நூல் அறிமுகம் மற்றும் மதிப்புரை



புத்தகத்தின் பெயர் : அறிவியல் பூர்வமான இந்து சமயம்.

ஆசிரியர்                      :  Er. N. P. A. ரவி, சேலம்.


       
             'அறிவியல் பூர்வமான இந்து சமயம்' ஒரு ஆய்வு நூல். இந்தப் புத்தகம் இந்து மதக் கோட்பாடுகளை அணுவியல் (Atomic Science) அடிப்படையில் ஆராய்ந்து, தக்க உருவகங்களுடன் ஒருங்கிணைத்து எழுதப்பட்ட நூலாகும். இந்து சமயத்தின் முதன்மைக் கடவுள்களான பிரம்மா, மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய கடவுள்களை முறையே புரோட்டான் (Proton), நியூட்ரான் (Neutron) மற்றும் எலெக்ட்ரான் (Electron) ஆகிய அணுக்கூறுகளாக (Subatomic Particles) ஆய்ந்தறிந்து கூறியிருக்கிறார். அதற்கான விளக்கங்கள் மற்றும் அறிவியல் பலுக்கல்களைப்  (Scientific Interpretations) புத்தகத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். இந்த மூன்று பெரும் கடவுள்களின் துணைவிகளாகிய சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் பார்வதி ஆகிய கடவுள்களும் அணுவியல் கோட்பாடுகளின் மற்ற அம்சங்கள் என்பதையும் புத்தகம் விளக்குகிறது. இந்துக்கள் வணங்கும் பிற தெய்வங்களாகிய விநாயகர், முருகர், ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பன் ஆகிய கடவுள்களுக்கான அணுவியல் விளக்கங்களும் அவற்றை ஆசிரியர் கையாண்டிருக்கும் முறையும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
                     
                 'இந்து' என்ற பெயர் வானவியல் அடிப்படையில் நிலவினைக் குறிக்கிறது என்பதையும் இந்துக்கள் அனைவரும் நிலவு என்னும் ஒரே அன்னையின் பிள்ளைகள் என்பதையும் இந்தப் புத்தகம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அந்த விதத்தில் சகோதரத்துவத் தத்துவம் இந்து மதத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது உலகிற்குச் சொல்லப் பட்டுள்ளது. 

                         திருப்பதி திருமலைக் கோவிலின் வரலாறு, அந்த வரலாற்றின் அறிவியல் அர்த்தம் ஆகியவை நூலில் அற்புதமாகக் கூறப்பட்டுள்ளன. அவை திருப்பதி தேவஸ்தானத்தினரால் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டும் இவ் ஆய்வு நூலினை 1௦௦௦ பிரதிகள் என்ற எண்ணிக்கையில் அச்சிட நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

                       இந்நூலில் சிதம்பரம் கோவிலின் வரலாறு, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் அனைத்தும் விளக்கப் பட்டுள்ளன. தமிழில் இப்படி ஒரு ஆய்வு நூல் வெளியாகி இந்து சமயத்தின் அணுவியல் கருத்துக்கள் தமிழில் பதிவாகி இருப்பது அற்புதம். 

                        நூலின் ஆசிரியர் ஒரு கட்டிடப் பொறியாளர். ஆய்வு நூல் என்பதால் ஆசிரியர் 'அறிமுக எழுத்தாளர்' என்கிற வட்டத்திற்குள் வரவில்லை. அறிவியல் அறிக்கை போல் இல்லாமல் சாதாரண உரைநடையாகவே புத்தகம் படிக்க சுவாரசியமாகச் செல்கிறது. 


#இந்துமதம் #இந்துமதத்தில்அறிவியல் #அணுவியல்