Sunday, December 31, 2017

நாட்காட்டிகள் - சில தகவல்கள்!

           காலண்டர் என்று நாம் அழைக்கும் 'நாட்காட்டிகள்' ஒவ்வொரு நாளிலும் நாம் தவிர்க்க முடியாத விஷயங்களில் ஒன்று. புத்தாண்டு என்றாலே நம் நண்பர்கள், வணிக நிறுவனங்கள்  நமக்குப் பரிசளிக்கும் பொருட்களாக நாட்குறிப்புகளும் (டைரிகள்), நாட்காட்டிகளுமே இருக்கின்றன. தினசரி நாட்காட்டிகள், மாத நாட்காட்டிகள், ஆன்லைன் நாட்காட்டிகள் என்று நாம் பல விதங்களிலும் இன்று எளிதில் அவற்றை உபயோகிக்கிறோம்.

            கிறிஸ்தவ மதம் இந்த உலகிற்கு அளித்த மிகப் பெரிய கொடை தான் இன்று உலகம் முழுவதும் பொதுவாகப் பின்பற்றப்படும் கிரிகோரியன் நாட்காட்டிகள். பேப்பர்களின் புழக்கம் அரிதாக இருந்த (கி.மு.) பழைய காலங்களில் தேவாலயங்களே தேதிகளை மக்களுக்குத் தெரியப்படுத்தின. நாட்காட்டிகள் பலமுறை பல்வேறு மன்னர்களால் மாற்றியமைக்கப் பட்டுள்ளன. அந்த மாற்றங்களை Calendar Reforms அல்லது Calendrical Reforms என்று அழைக்கிறார்கள்.

கிரிகோரியன் நாட்காட்டி 2018

        இன்று நாம் உபயோகப்படுத்தும் காலண்டர்களில் ஒரு சிறிய முரண்பாட்டைக் காண முடியும். மாதங்களின் பெயர்களை உற்று கவனிக்கும் போது சிலருக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். அதாவது, ஆங்கில நாட்காட்டிகளில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் மாதங்களின் பெயர்கள் கிரேக்க மற்றும் ரோமானிய மொழி வார்த்தைகள். ரோமானிய மொழியில்: 

          "செப்டா" என்றால் ஏழு. ஆனால் செப்டம்பர் என்பது ஒன்பதாவது மாதம்.
          "ஆக்டோ" என்றால் எட்டு. ஆனால் அக்டோபர் என்பது பத்தாவது மாதம்.
         "நோவா" என்றால் ஒன்பது. ஆனால் நவம்பர் என்பது பதினொன்றாவது மாதம்.
         "டெக்கா" என்றால் பத்து. ஆனால் டிசம்பர் என்பது பன்னிரண்டாவது மாதம்.

இந்த முரண்பாடு அல்லது வேறுபாடு எப்படி ஏற்பட்டது? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். 

மன்னர் ஜூலியஸ் சீசர்

            உண்மையில் கி.மு. காலத்து ரோமானிய நாட்காட்டியில் ஆரம்பத்தில் பத்து மாதங்களே இருந்தன. அதனால் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை இருக்கும் மாதங்கள் முறையே ஏழு முதல் பத்தாம் மாதங்களாகவே இருந்தன. ஜூலியஸ் சீசர் என்ற ரோமானிய மன்னர் ஒரு போரில் வெற்றி பெற்றதற்கு அடையாளமாக ரோமானிய மதகுருக்கள் JULY என்ற மாதத்தை வருடத்தின் ஏழாவது மாதமாகப் புதிதாகச் சேர்த்தார்கள். பின்பும், ஜூலியஸ் சீசரின் மறைவுக்குப் பிறகு ஆகஸ்டஸ் என்ற ரோமானிய மன்னனின் சிறந்த ஆட்சி நிர்வாகத்தைப் போற்றும் விதமாக AUGUST என்ற மாதத்தை வருடத்தின் எட்டாவது மாதமாகச் சேர்த்தன கிரேக்க நாட்டுத் தேவாலயங்கள்.

மன்னர் ஆகஸ்டஸ்

           மேலும், புதிதாகச் சேர்க்கப்பட்ட இரண்டு மாதங்களுமே சமமாக இருக்க வேண்டும் (இரண்டு மன்னர்களின் கவுரவத்தையும் முன்னிட்டு) என்கிற எண்ணத்தில் தான் இரண்டு மாதங்களிலும் 31 நாட்கள் இருக்கும் படியாக நாட்காட்டிகள் வடிவமைக்கப்பட்டன. (அதற்காகத் தான் February மாதத்தில் இருந்து இரண்டு நாட்களை எடுத்து இந்த இரண்டு மாதங்களிலும் இணைக்கப்பட்டன என்றும் ஒரு தகவல் உள்ளது.)

அதனால் தான் மாதங்களின் பெயர்களில் ஏற்பட்டிருக்கும் இந்த முரண்பாடு உருவானது.

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

#புத்தாண்டுநல்வாழ்த்துக்கள் #காலண்டர் #நாட்காட்டி #கிறிஸ்தவமதம் #CalendarReform #CalandricalReform #கிரிகோரியன்நாட்காட்டி #ஜூலியஸ்சீசர் #ஆகஸ்டஸ் 




Sunday, December 17, 2017

சனிபகவான் - சில விவரங்கள்!

                  வரும் 19.12.2017 செவ்வாய்க் கிழமை (ஹேவிளம்பி, மார்கழி 4) அன்று சனிப் பெயர்ச்சி. சனி பகவான் விருச்சிகம் ராசியில் இருந்து தனுசு ராசிக்குப் பெயர்கிறார். அவரவர் ராசிகளுக்கு என்னன்ன பலன்கள் என்று தெரிந்து கொள்வதில் அனைவருக்குமே ஆர்வம் இருக்கிறது. இந்த முறை மீம் மற்றும் வீடியோ வடிவங்களில் பலன்கள் வெளிவந்திருக்கின்றன. நிறையப் பேர் படித்து முடித்து விட்டோம். இப்போ சனிப் பெயர்ச்சியின் கதாநாயகனைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கான நேரம்.

  • சனி பகவான் சூரியனில் இருந்து (பூமியில் இருந்தும்) மிகவும் தள்ளி அமைந்திருக்கும் கிரகம். அதனால் சுற்றுப் பாதை மிகவும் பெரியது (Huge Orbit). அதனாலேயே ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்ளும் கால அளவு அதிகம். (இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள்). மந்தன் (Slower planet) என்று அழைக்கப்படுகிறார்.
  • வெளிவட்டம் (Outer Ring) உடைய ஒரே கிரகம் சனி தான்.
சனிக் கோள் 
  • சனி பகவான் நீல நிறம் அல்லது கருப்பு நிற உடல் கொண்டவர் என்று நம்பப்படுகிறார். அவர் காகத்தைத் தனது வாகனமாகக் கொண்டு இருப்பவர். அதனால் தான் சனிக் கிழமைகளில் காகத்திற்கு உணவு வைப்பதை ஒரு பழக்கமாக வைத்திருக்கிறோம். அதற்கான காரணத்தையும் இங்கே படிக்கலாம். 
காக வாகனத்தில் சனி பகவான் 
  • சனியை 'நீதிக்கோள்' என்று ஜோதிடர்கள் அழைக்கிறார்கள். அவர் ஒரு நீதிமான் ஆவார். நமது செயல்கள் விளைவிக்கும் நன்மை தீமைகளுக்கு ஏற்ற பலன்களைக் கண்டிப்பும் கறாருமாகக் கொடுக்கிறார். அதனால் தான் பயம் கலந்த மரியாதையுடன் அவர் பார்க்கப் படுகிறார்.
  • ஒருவரது சுய ஜாதகத்தில் சனி பகவான் வலிமையாக (ஆட்சி அல்லது உச்ச நிலைகள் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள்.) இருந்தால் அவர்கள் கண்டிப்பான சுபாவம் உடையவர்களாகவும் நியாயவாதிகளாகவும் இருக்கிறார்கள்.
சந்தனக் காப்பு 
  • "எல்லாப் புகழும் இறைவனுக்கே!" என்பார்கள். இந்தக் கலியுகத்தில் எல்லா இகழ்ச்சிகளும் (திட்டு வாங்குறார்!) சனீஸ்வரனுக்குத் தான். அவரவர் சுய ஜாதகத்தில் வேறு கிரகத்தினால் (உதாரணம் - ராகு, கேது) ஏற்படும் பிரச்சினைகளுக்குக் கூடச் சாதாரணமாக "சனி பிடிச்சு ஆட்டுது" என்று திட்டுகிறோம். (ஏனென்றால் இது கலியுகம். சனிக்கு இன்னொரு பெயர் கலி.)
  • சனி பகவான் ஏழரைச் சனி மற்றும் அஷ்டமச் சனியாக நம்மைப் பாடாய்ப் படுத்துகிறார். அவரைப் பற்றிய பழமொழிகளையும் அவற்றின் அர்த்தங்களையும் அடுத்த பாகத்தில் படிக்கலாம்.
  •              
  • எள், நல்லெண்ணெய், கருப்பு மற்றும் நீல நிற உடைகள் மட்டும் அல்லாமல், சிறந்த உழைப்பாளிகளையும் சனி பகவானுக்குப் பிடிக்கும்.
#சனிப்பெயர்ச்சி2017  #சனிபகவான் #SaturnTransit2017 #சனிப்பெயர்ச்சிபலன்கள்2017





Monday, December 4, 2017

இறைவனுக்கு இதயத்தில் இடமளிப்போம்!

     இறைவனின் இடம் எது? அவர் எங்கே இருக்கப் பிரியப்படுகிறார்? கோவிலிலா? நம் வீட்டுப் பூஜை அறையிலா? இல்லை. நம் இதயத்தில். மகாபாரதத்தில் அந்த முக்கிய நிகழ்வு - அஸ்தினாபுரத்தின் அரண்மனையில், அரச சபையில், சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்கடிக்கப் படுகிறார்கள். நாட்டினை இழந்து அனைவரும் அடிமைகள் ஆகிறார்கள். திரௌபதியும் அடிமைகள் பட்டியலில் சேருகிறாள். 

          பிறகு நடந்தது என்ன? நாட்டின் அரசியை அடிமையாக்கிச் சிரிக்கிறார்கள்; அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து வருகிறார்கள். அவள் அழுது புலம்பி அங்கிருந்த பெரியவர்களிடம் எல்லாம் நியாயம் கேட்டும் யாரும் அவளுக்கு உதவிக்கு வரவில்லை. மந்திரி சபையின் நடுக் கூடத்தில் அவள் ஆடையைப் பிடித்து இழுத்து அவமானப் படுத்துகிறார்கள்.  

திரௌபதி
               இறைவனை உதவிக்கு அழைக்கிறாள். கிருஷ்ண பகவானின் பக்தை அவள். என்னென்னவோ கூறி அழைக்கிறாள்; "கோகுலத்தில் பிறந்தவனே, துவாரகையில் வாழ்பவனே, தாமரை போன்ற கண்களை உடையவனே...." என்றெல்லாம் அழைக்கிறாள். இறைவன் வரவில்லை. கடைசியாக, "என் இதயத்தில் குடியிருப்பவனே" (சமஸ்கிருத ஸ்லோகத்தில் 'ஹிருதய வாஸி' என்று சொல்லப்பட்டுள்ளது.) என்று அழைக்கிறாள். உடனடியாகக் கிருஷ்ணன் அங்கே தோன்றி, ஆடை கொடுத்துக் காப்பாற்றுகிறார். 

கிருஷ்ணர்
                   சரி. கிருஷ்ணர் வர ஏன் இவ்வளவு தாமதம்? தனது பக்தைக்கு ஏற்படப் போகும் கஷ்டங்கள் அவருக்குத் தெரியாதா? அல்லது, அவளுக்குத் துன்பம் ஏற்பட்ட முதல் நொடியிலேயே அவர் ஏன் வரவில்லை? அவ்வளவு அழைத்தும் வரவில்லையே... ஏன்?
                    அவர் சோதிக்கிறார்; நம் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறோமா என்று சோதிக்கிறார். அவர் அதையே விரும்புகிறார். "எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது? போன மாதம் தானே அந்தக் கோவிலுக்குப் போனேன்; வருடா வருடம் அங்கே செல்கிறேனே..." என்று புலம்புவதற்கு முன், நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம் -நம் இதயத்தில் இறைவனுக்கு இடம் கொடுத்திருக்கிறோமா என்று. நாம் அதைச் செய்து விட்டாலே தெளிவாகி விடலாம். சுபம்!

#திரௌபதி #கிருஷ்ணர் #மகாபாரதம்
#இதயத்தில்இடமளிப்போம்