இறைவனின் இடம் எது? அவர் எங்கே இருக்கப் பிரியப்படுகிறார்? கோவிலிலா? நம் வீட்டுப் பூஜை அறையிலா? இல்லை. நம் இதயத்தில். மகாபாரதத்தில் அந்த முக்கிய நிகழ்வு - அஸ்தினாபுரத்தின் அரண்மனையில், அரச சபையில், சூதாட்டத்தில் பாண்டவர்கள் தோற்கடிக்கப் படுகிறார்கள். நாட்டினை இழந்து அனைவரும் அடிமைகள் ஆகிறார்கள். திரௌபதியும் அடிமைகள் பட்டியலில் சேருகிறாள்.
பிறகு நடந்தது என்ன? நாட்டின் அரசியை அடிமையாக்கிச் சிரிக்கிறார்கள்; அவள் கூந்தலைப் பிடித்து இழுத்து வருகிறார்கள். அவள் அழுது புலம்பி அங்கிருந்த பெரியவர்களிடம் எல்லாம் நியாயம் கேட்டும் யாரும் அவளுக்கு உதவிக்கு வரவில்லை. மந்திரி சபையின் நடுக் கூடத்தில் அவள் ஆடையைப் பிடித்து இழுத்து அவமானப் படுத்துகிறார்கள்.
திரௌபதி |
இறைவனை உதவிக்கு அழைக்கிறாள். கிருஷ்ண பகவானின் பக்தை அவள். என்னென்னவோ கூறி அழைக்கிறாள்; "கோகுலத்தில் பிறந்தவனே, துவாரகையில் வாழ்பவனே, தாமரை போன்ற கண்களை உடையவனே...." என்றெல்லாம் அழைக்கிறாள். இறைவன் வரவில்லை. கடைசியாக, "என் இதயத்தில் குடியிருப்பவனே" (சமஸ்கிருத ஸ்லோகத்தில் 'ஹிருதய வாஸி' என்று சொல்லப்பட்டுள்ளது.) என்று அழைக்கிறாள். உடனடியாகக் கிருஷ்ணன் அங்கே தோன்றி, ஆடை கொடுத்துக் காப்பாற்றுகிறார்.
கிருஷ்ணர் |
சரி. கிருஷ்ணர் வர ஏன் இவ்வளவு தாமதம்? தனது பக்தைக்கு ஏற்படப் போகும் கஷ்டங்கள் அவருக்குத் தெரியாதா? அல்லது, அவளுக்குத் துன்பம் ஏற்பட்ட முதல் நொடியிலேயே அவர் ஏன் வரவில்லை? அவ்வளவு அழைத்தும் வரவில்லையே... ஏன்?
அவர் சோதிக்கிறார்; நம் இதயத்தில் இடம் கொடுத்திருக்கிறோமா என்று சோதிக்கிறார். அவர் அதையே விரும்புகிறார். "எனக்கு ஏன் இந்தத் துன்பம் வந்தது? போன மாதம் தானே அந்தக் கோவிலுக்குப் போனேன்; வருடா வருடம் அங்கே செல்கிறேனே..." என்று புலம்புவதற்கு முன், நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம் -நம் இதயத்தில் இறைவனுக்கு இடம் கொடுத்திருக்கிறோமா என்று. நாம் அதைச் செய்து விட்டாலே தெளிவாகி விடலாம். சுபம்!
#திரௌபதி #கிருஷ்ணர் #மகாபாரதம்
#இதயத்தில்இடமளிப்போம்
No comments:
Post a Comment