Sunday, January 28, 2018

பாரி முல்லைக்குத் தேர் கொடுத்தார். ஆனால் ஏன்?

             நாம் பள்ளிப் பாடமாகப் படித்தது தான் இந்த "முல்லைக்குத் தேர் கொடுத்தான் வேள் பாரி!" என்கிற சொற்றொடர். அந்தக் கதையையும் நாம் படித்திருக்கிறோம். அதாவது - பாரி மன்னன் (கடையேழு வள்ளல்களில் ஒருவர்) ஒரு வள்ளல். துன்பம், கஷ்டம் என்று யார் வந்து உதவி கேட்டாலும் உடனே உதவி செய்து விடுவார்; ஒரு முறை அவர் தனது தேரில் சுற்றுப் பயணம் செய்த போது ஒரு முல்லைக் கொடி, பற்றிப் படர கொம்பு இல்லாமல் இருந்ததைப் பார்க்கிறார். அந்த முல்லைக் கொடிக்கு உதவி செய்யும் விதமாக, தான் ஏறி வந்த தேரையே நிறுத்தி, அது பற்றிப் படர வழி செய்தார். இது தான் வரலாற்றில் நாம் படித்த கதை.

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி மன்னன் 
                      அதனாலேயே அவர் வள்ளலாகப் போற்றப் படுகிறார். எல்லாம் சரி. பாரி மன்னர் இதைக் கொஞ்சம் யோசித்துச் செய்திருக்கலாம். அருகில் இருக்கும் மரத்தின்  மீது படர விட்டிருக்கலாம்; அல்லது தனது தேரோட்டியின் மூலம் ஒரு கொழு கொம்போ குச்சியோ நட்டிருக்கலாம். தன் தேரை ஏன் கொடுக்க வேண்டும்?

சிலை 
                           தேர் என்பது ஒரு செயலாற்றத்தக்க சாதனம் - operable machine. ஆனால் ஒரு முல்லைக் கொடி படருவதற்கு ஒரு passive structure (செயல் படாத அமைப்பு) போதும். மன்னர் ஒரு நல்ல பொருளை வீணடித்து விட்டார். பாரி மன்னர் Resource utilizationஐ  இன்னும் நன்றாக யோசித்துச் செய்திருக்கலாம்.

#ResourceUtilization #பாரிமன்னர் #வேள்பாரி #பாரிவள்ளல்

                                     



Friday, January 5, 2018

தமிழ்நாட்டில் - அரசியலும் கலைத்துறையும்.

                   தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது புதிது அல்ல. மிகப் பெரும்பான்மையான மக்களால்ஏற்றுக் கொள்ளப்பட்டு, வெற்றிகரமான அரசியல் வாழ்வை நடத்தி, நம்மை வழிநடத்திய தலைவர்களை நாம் கண்டிருக்கிறோம்.
              கலைத்துறை, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணம் என்ன? சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும் உதவியவை தெருக்கூத்துக்களும் நாடகங்களுமே. திரு. பம்மல் சம்பந்த முதலியார், திரு. அவ்வைசண்முகம், டி.கே.எஸ் சகோதரர்கள் போன்றவர்களால் நடத்தப்பட்ட நாட்டுப்பற்று நாடகங்கள், மற்றும் பல தெருக்கூத்துக் கலைஞர்களால் நடத்தப்பட்ட வீதிநாடகங்கள் தான் அன்றைய மக்களின் விழிப்புணர்வுக்குக் காரணமாக இருந்தன.
வள்ளி திருமணம் நாடகம்
                 அந்தக் காலகட்டத்தில் நாடகங்கள் நடக்கும் இடங்களுக்கே காவல் துறை அதிகாரிகள் வருவார்கள். நடிகர்களையும் நாடக ஆசிரியர்களையும் கைது செய்து கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள். நாடகக் கலைஞர்கள் தண்டனை முடிந்து வெளியில் வந்து மீண்டும் நாடகம் போடுவார்கள்.
நாடகம்
            அதனால் மக்களுக்கு நாடகக் கலைஞர்களின் மீது நிறைந்த அபிமானமும் நன்றியுணர்வும் இருந்தது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஆகியோர் நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கலைத்துறையின் மீது மக்களுக்கு இருந்த மதிப்பு, மரியாதையின் காரணமாகவும், நம்பிக்கையின் காரணமாகவும் இவர்கள் அனைவரும் தங்குதடையின்றி மக்களால் மனதார ஏற்றுக் கொள்ளப் பட்டு, தலைவர்களாக மதிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களின் வழிவந்த வாரிசுகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள். மற்றபடி, தமிழர்களைப் பற்றி வரும் சில மோசமான விமர்சனங்கள் நம்மை நாமே குறைத்து மதிப்பீடு செய்ய வைக்கின்றன. காரணமின்றி நம் தமிழினம் எவர் ஒருவரையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை (இதுவரை).
             இன்றும் அரசியலுக்கு வரும் நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்காக என்ன செய்தார்கள்? மாநில, தேசிய நலனில் அவர்களின் அக்கறை, அவர்களின் சமூக மற்றும் அரசியல் கொள்கைகள் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து தீர்மானித்து அவர்களை ஏற்றுக் கொள்வதைப் பற்றி யோசிப்பதே நல்லது. தேவையற்ற கேலி, கிண்டல் போக்குகளை விடுத்து, தரமான விமர்சனங்களை அவர்களின் முன் வைப்பதும் வாக்காளர்களாகிய, மக்களாகிய நமது கடமை.
#தமிழகஅரசியல் #கலைத்துறை #நாடகங்கள் #சுதந்திரப்போராட்டம்