Thursday, August 24, 2017

விநாயகர் சதுர்த்தி!

எதில் வேண்டுமானாலும் செய்யுங்கள் - நம் விநாயகரை!

             அது மஞ்சள்தூளோ, மாட்டுச்சாணமோ, பச்சரிசி மாவோ, களிமண்ணோ - உங்களுக்கு எது விருப்பமோ, எது வசதியோ - அதில் ஒரு கூம்பு உருவத்தைப் பிடித்து வையுங்கள். அல்லது உங்களால் விநாயகரின் உருவம் போலவே உருவாக்கும் வழியிருந்தால்.... உருவாக்குங்கள் உங்கள் மனதில் முழுமுதல் கடவுளாக வீற்றிருக்கும் விநாயகரை!
   
            விநாயகர் எளிமையின் வடிவம். அருகம்புல்லைக் கூட அவருக்குப் படைக்கலாம். நெய்யில் செய்த இனிப்புப் பதார்த்தங்களையும் அவருக்குச் சுவைக்கக் கொடுக்கலாம். அவருக்கு எல்லாம் ஒன்று தான். எருக்கம்பூவும், வாசனை மிக்க மல்லிகையும் அவருக்கு முன் சமமே. 

விநாயகர் சதுர்த்தி பூஜை 

        விநாயகர் சதுர்த்தி என்பது ஆவணி மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்த நான்காவது திதியான சதுர்த்தியன்று வருகிறது. அன்றைய நாளில் தான் விநாயகர் பிறந்ததாக நம்பிக்கை. அன்றைய நாளில் வீட்டில் உள்ள விநாயகர் படங்கள், சிலைகளையோ, அல்லது உங்கள் விருப்பப்படி ஒரு விநாயகரைச் செய்தோ, வழிபடுங்கள் - பிறகு ஏதேனும் நீர்நிலைகளில் கரைத்து விடலாம். ஆற்றிலோ, கடலிலோ உங்கள் கிணற்றிலோ கரைப்பது நம் விருப்பமே.

ஏன் கரைக்கிறார்கள்?
   
                இன்றைக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான கோவில்கள் இல்லாத காலத்தில், கோவில்களுக்குச் செல்லப் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில், யார் எங்கிருந்தாலும் ஒரு விநாயகர் உருவத்தைத் தங்களது வீட்டிலேயே உருவாக்கி வைத்து வழிபடுவதே இந்த முறையாகும். பின்னர் எந்த ஒரு தீட்டும் படாமல் இருக்க வேண்டி, அந்த விநாயகர் உருவத்தைக் கரைத்து விடுகின்றனர். 

கரைக்கக் கூடிய களிமண் விநாயகர்

என்ன பிடிக்கும் விநாயகருக்கு?

                    விநாயகருக்கு எல்லாமே சமம் தான் என்றாலும், ஓடு உடைய பழங்கள், உணவுப் பண்டங்களை ('Shell and Kernel' objects) விநாயகர் சதுர்த்தியன்று அவருக்குப் படைப்பது சிறப்பு. அதாவது தேங்காய், மாதுளம்பழம், பூர்ணம் வைக்கப்பட்ட கொழுக்கட்டை போன்றவைகளைப் படைக்கலாம். ஒரு மணி நெல்லோ, ஒரு நிலக்கடலைக் காயோ படைத்தாலும் அவருக்கு மகிழ்ச்சியே. 

கொழுக்கட்டை

"வெளியில் இருக்கும் உடல் மட்டுமே உனக்கு உரியது; உள்ளே இருக்கும் உயிர் (ஆத்மா) கடவுளுக்கு உரியது" என்பதை உணர்த்தவே இந்த ஓடு உடைய பொருட்களைத் தன் விருப்பமாக வைத்திருக்கிறார் விநாயகர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

                ஆனால் இன்று விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிக விமரிசையாகவும் மிகுந்த பொருட்செலவில் ஆடம்பரமாகவும் கொண்டாடப் படுகின்றன. மேலும் வேறு சில சர்ச்சைகளையும் பிரச்சினைகளையும் கூட இந்த ஊர்வலங்கள் ஏற்படுத்தி விட்டன. இவையெல்லாம் தவிர்க்கப்பட்டு, தத்துவங்கள் பின்பற்றப் படுவது மட்டுமே சிறப்பானதாக இருக்கும்.


#விநாயகர்சதுர்த்தி #விநாயகர் #பிள்ளையார் #விசர்ஜனம்
#ganeshchathurthi 

Saturday, August 12, 2017

மேட்டூர் ஆடிப்பெருக்கு விழா

                     காவிரி நதி பாயும் எங்கள் செக்கானூர், மேட்டூர் அணையிலிருந்து வெளிவரும் தண்ணீரினால் பயன் பெறும் ஊர்களில் ஒன்றாகும். எங்கள் ஊரில் ஆடி 18 என்பது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். காவிரியின் புது நீருக்குத் தரப்படும் ஒரு வரவேற்பு இது என்றாலும், பாரதப் போரின் இறுதி நாளும் இதுவே என்பதால் சற்றுக் கூடுதல் சிறப்பானது இந்த நாள்.

                     ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆற்றில் முளைப்பாரி விடும் நிகழ்வுக்காக ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்கு முன்பே தானியங்களைக் கொண்டு முளைப்பாரி விதைக்கப் பட்டு விடும். பின்பு ஆடி மாதம் பதினெட்டாம் தேதியன்று ஆற்றங்கரைக்குச் சென்று காவிரி நீரை வணங்கிப் புது நீரில் குளிப்பார்கள். 

ஆற்று மண்ணில் செய்த பஞ்ச பாண்டவர் உருவங்கள்

                      பிறகு ஆற்று மண்ணை எடுத்து 6 சிறு கூம்புகள் போல் இடுவார்கள். அவை பஞ்ச பாண்டவர்களான தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும் ஆறாவது சிலை திரவுபதியையும் குறிக்கும். அந்த ஆறாவது கூம்பு உருவத்திற்கு மட்டும் பெண்கள் உபயோகிக்கும் சில பொருட்களால் அலங்கரிக்கிறார்கள். (சிலர் ஒரே ஒரு கூம்பு உருவத்தை மட்டும் இடுவார்கள். அப்படியெனில் அது காவிரித் தாயைக் குறிக்கும்.) அந்த மண் உருவங்களுக்கு மஞ்சள், குங்குமம், பூக்கள் வைத்து, தெய்வச் சிலைகளைப் பூசிப்பது போல் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பின்பு முளைப்பாரியை ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வழிபாட்டை முடித்து விடுவோம்.

முளைப்பாரி 

                   ஊர்க்கோவிலில் இருக்கும் அம்மன் சிலையை ஆற்றுப் புது நீரில் கழுவிப் பூஜை செய்து மீண்டும் கோவிலுக்குக் கொண்டு சென்று வைப்பதும் எங்கள் ஊரில் நடக்கும். இது வருடா வருடம் எங்கள் ஊரில் நடக்கும் எளிமையான நிகழ்வு. இந்த வருடமும் இறைவனின் அருளால் இது எளிமையாகவும் நிறைவாகவும் நடந்தது.

#ஆடிப்பெருக்கு #மேட்டூர் #ஆடி18 #பஞ்சபாண்டவர் #திருவிழா 

Thursday, August 10, 2017

13 என்றால் மர்மம்???

              பொதுவாகவே 13 என்ற எண் உலகின் பல்வேறு நாடுகளிலும் மர்ம எண்ணாகக் கருதப்படுகிறது. (இந்துக்களை, அதிலும் தமிழர்களைப் பொறுத்தவரை 8 என்ற எண் மீது தான் சற்று பயம். அது சனீஸ்வரனின் எண் என்பதால் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறோம்.) ஆனாலும் உலகமெங்குமே மர்மத்தையும் பயத்தையும் விளைவித்து, தவிர்க்கப் படும் எண்ணாகப்  13 ஆம் எண் விளங்குகிறது. அதற்குக் காரணம் ஒரு விஷயமாகத் தான் இருக்க முடியும். அது ஆதி மனிதர்களின் மன நிலை மட்டுமே.

பதிமூன்று
                    நம் பயத்திற்கும் ஆதி மனிதன் பயத்திற்கும் என்ன தொடர்புன்னு கேட்கிறீங்களா? இருக்கு. மரபு வழி அறிவு (Gene Knowledge) என்பது நம் முன்னோர்களிடமிருந்து இயற்கையாகவே நமக்குக் கிடைக்கும் அறிவு ஆகும். அது போலவே சிலரின் மீது கருணை, சில விஷயங்களின் மீது பயம்.... இவையெல்லாமும் நம் ஆழ்மனதில் இருக்கும் மரபு வழி அறிவு சார்ந்த விஷயங்களே! (Gene knowldegeன்னா..... ஸ்ருதிஹாசன் 'ஏழாம் அறிவு' படத்திலே ஆராய்ச்சி பண்ணுவாரே! அதே..... தான்.)

ஆதி மனிதன்

                  மனித இனம் தோன்றிய காலத்தில் சில விஷயங்களைக் (சில மிருகங்கள், மரங்கள், தான் வளர்க்கும் கால்நடைகள் போன்றவற்றை....) கணக்கிட மனிதன் எண்களைப் புழக்கத்தில் கொண்டு வந்தான். அப்போது அவனுக்கு எண்ணிக்கைக்கு உதவியாக இருந்தவை கைகளும் கால்களும் தான். ஆதி மனிதர்கள் கை விரல்களில் பத்து எண்ணிக்கை வரை எண்ணக் கற்றுக் கொண்டார்கள். அதற்கு அடுத்த இரு எண்ணிக்கைகளுக்கு இரண்டு கால்களையும் பயன் படுத்திக் கொண்டார்கள். பன்னிரண்டு வரை ஆயிற்று. அடுத்த எண்ணாகிய பதிமூன்றை எண்ணுவதற்கு எதுவுமில்லை. அப்போது எப்படி எண்ணுவது என்பது தான் பதிமூன்றைப் பற்றிய முதல் மர்மமாக இருக்க வேண்டும். அந்தக் காலகட்டத்தில்  ஏற்பட்ட பயம் மனிதனின் மூளையில் அப்படியே பதிந்து விட்டது.
                       
ஆதி மனிதனும் அவன் கால்நடைகளும் 

                       அப்போதிருந்தே மனித இனம் பதிமூன்று என்ற எண்ணைக் கையாளுவதைப் பற்றிய பயத்தைக் கொண்டிருந்தது. ஆதி காலத்திலிருந்தே பதிமூன்றை முடித்த அளவு தவிர்த்திருக்கிறார்கள். பிறகு எண்ணிக்கைக்கென்று பல்வேறு கருவிகளை மனிதன் கண்டுபிடித்து விட்டான். கணிதம் என்பது இன்று எவ்வளவோ வளர்ந்து விட்ட போதிலும் இந்த பயம் மட்டும் இன்னும் மாறவில்லை.

                            இப்போது நமக்குத் தான் எண்ணத் தெரியமே. இனி (முடிந்தவரை) பயம் வேண்டாம். :-)

#13 #மர்மஎண்பதிமூன்று #பதிமூன்று #ஆதிமனிதன் #மர்மம் #திகில்