Thursday, August 24, 2017

விநாயகர் சதுர்த்தி!

எதில் வேண்டுமானாலும் செய்யுங்கள் - நம் விநாயகரை!

             அது மஞ்சள்தூளோ, மாட்டுச்சாணமோ, பச்சரிசி மாவோ, களிமண்ணோ - உங்களுக்கு எது விருப்பமோ, எது வசதியோ - அதில் ஒரு கூம்பு உருவத்தைப் பிடித்து வையுங்கள். அல்லது உங்களால் விநாயகரின் உருவம் போலவே உருவாக்கும் வழியிருந்தால்.... உருவாக்குங்கள் உங்கள் மனதில் முழுமுதல் கடவுளாக வீற்றிருக்கும் விநாயகரை!
   
            விநாயகர் எளிமையின் வடிவம். அருகம்புல்லைக் கூட அவருக்குப் படைக்கலாம். நெய்யில் செய்த இனிப்புப் பதார்த்தங்களையும் அவருக்குச் சுவைக்கக் கொடுக்கலாம். அவருக்கு எல்லாம் ஒன்று தான். எருக்கம்பூவும், வாசனை மிக்க மல்லிகையும் அவருக்கு முன் சமமே. 

விநாயகர் சதுர்த்தி பூஜை 

        விநாயகர் சதுர்த்தி என்பது ஆவணி மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு அடுத்த நான்காவது திதியான சதுர்த்தியன்று வருகிறது. அன்றைய நாளில் தான் விநாயகர் பிறந்ததாக நம்பிக்கை. அன்றைய நாளில் வீட்டில் உள்ள விநாயகர் படங்கள், சிலைகளையோ, அல்லது உங்கள் விருப்பப்படி ஒரு விநாயகரைச் செய்தோ, வழிபடுங்கள் - பிறகு ஏதேனும் நீர்நிலைகளில் கரைத்து விடலாம். ஆற்றிலோ, கடலிலோ உங்கள் கிணற்றிலோ கரைப்பது நம் விருப்பமே.

ஏன் கரைக்கிறார்கள்?
   
                இன்றைக்கு இருக்கும் அளவுக்கு அதிகமான கோவில்கள் இல்லாத காலத்தில், கோவில்களுக்குச் செல்லப் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த காலகட்டத்தில், யார் எங்கிருந்தாலும் ஒரு விநாயகர் உருவத்தைத் தங்களது வீட்டிலேயே உருவாக்கி வைத்து வழிபடுவதே இந்த முறையாகும். பின்னர் எந்த ஒரு தீட்டும் படாமல் இருக்க வேண்டி, அந்த விநாயகர் உருவத்தைக் கரைத்து விடுகின்றனர். 

கரைக்கக் கூடிய களிமண் விநாயகர்

என்ன பிடிக்கும் விநாயகருக்கு?

                    விநாயகருக்கு எல்லாமே சமம் தான் என்றாலும், ஓடு உடைய பழங்கள், உணவுப் பண்டங்களை ('Shell and Kernel' objects) விநாயகர் சதுர்த்தியன்று அவருக்குப் படைப்பது சிறப்பு. அதாவது தேங்காய், மாதுளம்பழம், பூர்ணம் வைக்கப்பட்ட கொழுக்கட்டை போன்றவைகளைப் படைக்கலாம். ஒரு மணி நெல்லோ, ஒரு நிலக்கடலைக் காயோ படைத்தாலும் அவருக்கு மகிழ்ச்சியே. 

கொழுக்கட்டை

"வெளியில் இருக்கும் உடல் மட்டுமே உனக்கு உரியது; உள்ளே இருக்கும் உயிர் (ஆத்மா) கடவுளுக்கு உரியது" என்பதை உணர்த்தவே இந்த ஓடு உடைய பொருட்களைத் தன் விருப்பமாக வைத்திருக்கிறார் விநாயகர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

                ஆனால் இன்று விநாயகர் சதுர்த்தி விழாக்கள் மிக விமரிசையாகவும் மிகுந்த பொருட்செலவில் ஆடம்பரமாகவும் கொண்டாடப் படுகின்றன. மேலும் வேறு சில சர்ச்சைகளையும் பிரச்சினைகளையும் கூட இந்த ஊர்வலங்கள் ஏற்படுத்தி விட்டன. இவையெல்லாம் தவிர்க்கப்பட்டு, தத்துவங்கள் பின்பற்றப் படுவது மட்டுமே சிறப்பானதாக இருக்கும்.


#விநாயகர்சதுர்த்தி #விநாயகர் #பிள்ளையார் #விசர்ஜனம்
#ganeshchathurthi 

No comments:

Post a Comment