காவிரி நதி பாயும் எங்கள் செக்கானூர், மேட்டூர் அணையிலிருந்து வெளிவரும் தண்ணீரினால் பயன் பெறும் ஊர்களில் ஒன்றாகும். எங்கள் ஊரில் ஆடி 18 என்பது முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும். காவிரியின் புது நீருக்குத் தரப்படும் ஒரு வரவேற்பு இது என்றாலும், பாரதப் போரின் இறுதி நாளும் இதுவே என்பதால் சற்றுக் கூடுதல் சிறப்பானது இந்த நாள்.
ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆற்றில் முளைப்பாரி விடும் நிகழ்வுக்காக ஏழு அல்லது ஒன்பது நாட்களுக்கு முன்பே தானியங்களைக் கொண்டு முளைப்பாரி விதைக்கப் பட்டு விடும். பின்பு ஆடி மாதம் பதினெட்டாம் தேதியன்று ஆற்றங்கரைக்குச் சென்று காவிரி நீரை வணங்கிப் புது நீரில் குளிப்பார்கள்.
ஆற்று மண்ணில் செய்த பஞ்ச பாண்டவர் உருவங்கள் |
பிறகு ஆற்று மண்ணை எடுத்து 6 சிறு கூம்புகள் போல் இடுவார்கள். அவை பஞ்ச பாண்டவர்களான தருமன், பீமன், அர்ஜுனன், நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோரையும் ஆறாவது சிலை திரவுபதியையும் குறிக்கும். அந்த ஆறாவது கூம்பு உருவத்திற்கு மட்டும் பெண்கள் உபயோகிக்கும் சில பொருட்களால் அலங்கரிக்கிறார்கள். (சிலர் ஒரே ஒரு கூம்பு உருவத்தை மட்டும் இடுவார்கள். அப்படியெனில் அது காவிரித் தாயைக் குறிக்கும்.) அந்த மண் உருவங்களுக்கு மஞ்சள், குங்குமம், பூக்கள் வைத்து, தெய்வச் சிலைகளைப் பூசிப்பது போல் பூஜை செய்து வழிபடுகிறார்கள். பின்பு முளைப்பாரியை ஆற்றில் மிதக்க விட்டு விட்டு வழிபாட்டை முடித்து விடுவோம்.
முளைப்பாரி |
ஊர்க்கோவிலில் இருக்கும் அம்மன் சிலையை ஆற்றுப் புது நீரில் கழுவிப் பூஜை செய்து மீண்டும் கோவிலுக்குக் கொண்டு சென்று வைப்பதும் எங்கள் ஊரில் நடக்கும். இது வருடா வருடம் எங்கள் ஊரில் நடக்கும் எளிமையான நிகழ்வு. இந்த வருடமும் இறைவனின் அருளால் இது எளிமையாகவும் நிறைவாகவும் நடந்தது.
#ஆடிப்பெருக்கு #மேட்டூர் #ஆடி18 #பஞ்சபாண்டவர் #திருவிழா
Very nice information most of us do not know. Thanks for sharing.
ReplyDelete