Showing posts with label தமிழ் மொழி. Show all posts
Showing posts with label தமிழ் மொழி. Show all posts

Wednesday, October 3, 2018

கதை நேரம்! சிறந்தது எது?

      முன்னொரு காலத்தில் ஒரு நாட்டை ஒரு அரசர் ஆண்டு வந்தார். ஒரு நாள் அவருடைய அரசவைக்கு ஒரு இரத்தின வியாபாரி வந்தார். அவர் ஒரு வைரக்கல்லை அரசரிடம் கொடுத்து, "அரசரே! இது தான் உலகிலேயே மிகச் சிறந்த கல். இது உங்களிடம் இருப்பது தான் இந்த நாட்டுக்கே சிறப்பு (The usual marketing technique!)" என்று கூறினார். அரசரும் அதை வாங்கிக் கொண்டு அந்த வியாபாரிக்கு நிறையப் பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினார். 

வைரக்கல்
     பிறகு தன் மகனான இளவரசனை அழைத்து, "மகனே! இது தான் உலகிலேயே மிகச் சிறந்த கல். இதை என் பரிசாக நீ வைத்துக் கொள்."என்று கூறினார். இளவரசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. அரண்மனையில் இருந்த அமைச்சர்கள், பணியாளர்கள், தனது நண்பர்கள் என்று அனைவரிடமும் தன்னிடம் 'உலகின் மிகச் சிறந்த கல்' இருப்பதாகக் கூறிப் பூரிப்பு அடைந்து கொண்டிருந்தான். 

The surprised prince!
        அதைக் கண்ட அரசர், 'விலை உயர்ந்த பொருளே சிறந்த பொருள்' என்ற எண்ணத்துக்குத் தன் மகன் வந்து விடக் கூடாது என்று நினைத்தவராய், தன் மகனை அழைத்தார். அவனிடம் நிறையக் களிமண்ணைக் கொடுத்தார். "நீ நகரத்திற்குச் செல். அங்கே நீ சந்திக்கும் நபர்களிடம் இந்தக் களிமண்ணைக் கொடுத்து, 'உலகின் மிகச் சிறந்த கல்லின் வடிவத்தைச்' செய்து காட்டச் சொல். நீ இளவரசன் என்று யாரிடமும் கூறாதே." என்றார். இளவரசனும் நகரத்திற்குச் சென்றான். அங்கே முதலில் அவன் ஒரு சலவைத் தொழிலாளியைச் சந்தித்தான். 

சலவைத் தொழிலாளி 
          அவரிடம், "உலகின் மிகச் சிறந்த கல் எப்படி இருக்கும் என்று இந்தக் களிமண்ணில் செய்து காட்டுங்கள்" என்று கொஞ்சம் களிமண்ணைக் கொடுத்தான். அவர், துணி துவைக்கும் கல்லை போன்ற ஒரு கன செவ்வக (cuboid) வடிவத்தைச் செய்தார். அதன் மேல்பகுதி மட்டும் சற்று ஏற்ற இறக்கமாக இருந்தது.



      "தம்பி! உலகின் மிகச் சிறந்த கல் இப்படித் தான் இருக்க வேண்டும். கல்லின் மேல் முகம் சமமாக இல்லாமல் இப்படி ஏற்ற இறக்கத்துடன் இருந்தால் தான் எங்களுக்குத் துணி துவைக்க வசமாக இருக்கும்." என்றார். இளவரசனுக்குக் குழப்பமாக இருந்தது. நம்மிடம் இருக்கும் கல்லின் வடிவமும் இந்தக் கல்லின் வடிவமும் வேறு வேறாக உள்ளதே.... என்று நினைத்துக் கொண்டே வேறு ஒருவரிடம் சென்று அவரிடமும் சிறிது களிமண்ணைக் கொடுத்து, அதே போல் கூறினான். அவர் ஒரு நாவிதர்.  


     அவர் தனது கத்தியை ஒரு உரைகல்லில் வைத்துத் தீட்டிக் கொண்டிருந்தார். அந்த உரைகல் அவரால் அதிகம் உரையப்பட்டு, நடுப்பகுதி தேய்ந்து போய்ச் சற்றுக் குழிவாக இருந்தது. அவர் அந்தக் களிமண்ணைக் கொண்டு ஒரு தட்டையான செவ்வகக் கல்லை உருவாக்கினார். அதன் மேல்பகுதி சொரசொரப்பாக இருந்தது.


     "தம்பி! இந்தக் கல் தான் உலகின் சிறந்த கல். எங்கள் கத்திகளைக் கூர்மைப் படுத்த இதுவே சிறந்த கல்லாக இருக்கும்." என்றார். இளவரசனுக்கு மீண்டும் அதே குழப்பம். அவன் சற்று நகர்ந்து அருகிலிருந்த செங்கல் சூளைக்குச் சென்றான். அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவரிடமும் களிமண்ணைக் கொடுத்து, 'உலகின் மிகச் சிறந்த கல்லின் உருவத்தை'ச் செய்து காட்டச் சொன்னான். 


        அவர் செங்கல்லைப் போன்ற ஒரு கன செவ்வக உருவத்தைச் செய்து இளவரசனிடம் கொடுத்தார். அந்தக் கல்லின் எல்லாப் பக்கங்களிலும் மிகமிகச் சிறிய துளைகள் கொண்டதாக, ஒரு தரமான செங்கல்லைப் போலவே அது இருந்தது. 


    "தம்பி!, இந்தக் கல் சிறப்பாக நீரையும் கலவையையும் உறிஞ்சிப் பிடித்துக் கொள்ளும் தன்மையுடைய முதல்தரமான செங்கல்லைப் போல உருவாக்கியுள்ளேன். இது தான் உலகின் மிகச் சிறந்த கல்." என்றார். இப்போது இளவரசனின் குழம்பிய மனம் தெளிவடைய ஆரம்பித்தது. அவன் தன் தந்தையிடம் சென்று நடந்ததைக் கூறினான்.


       அரசர், "இப்போது என்ன புரிந்து கொண்டாய்?" என்றார். "விலையுயர்ந்த விஷயங்கள் எல்லாம் சிறந்த விஷயங்கள் அல்ல. நமக்கும் நம் வாழ்க்கைக்கும் உதவும் விஷயங்கள், நம்மை மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் வைத்துக் கொள்ளும் விஷயங்களே சிறந்த விஷயங்கள்." என்று கூறினான் இளவரசன்.

          நம் வாழ்க்கையிலும், இது போலவே, நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் விஷயங்கள், நம்மை நிறைவாக உணர வைக்கும் விஷயங்கள், அவை எவ்வளவு சிறியவைகளாக இருந்தாலும் சிறப்பான விஷயங்களே! நம் உறவுகள், நம் இல்லம், சுற்றுப்புறம், நம் வேலை, அனைத்துமே சிறப்பான விஷயங்கள் என்று நாம் நினைத்தால் அவை யாவும் சிறப்பான விஷயங்களே. நன்றி!

Friday, September 28, 2018

கதை நேரம்! ஆண்டவன் கட்டளை

ஒரு சின்ன கதை பாக்கலாம் இன்னைக்கு.

ஒரு காட்டில் ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் சக்தி வாய்ந்த முனிவர். அவர் ஒரு நாள் நதிக்கரையில் நீராடிக் கொண்டிருந்த போது, ஒரு சிறிய எலிக்குட்டி தனியாக இருப்பதைக் கண்டார். தாய் இல்லாத அந்த எலிக்கு அடைக்கலம் கொடுக்க முடிவு எடுத்தார். அந்தக் குட்டி எலியைத் தனது ஆசிரமத்துக்கு எடுத்துச் சென்று தனது மனைவியிடம் கொடுத்து வளர்க்கச் சொன்னார். அவர் மனைவியோ, "எனக்குப் பெண் குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும்; அதனால், நீங்கள் இந்த எலிக்குட்டியை, உங்கள் தவ சக்தியை உபயோகித்து ஒரு பெண் குழந்தையாக மாற்றிக் கொடுங்கள்." என்றார்.



           முனிவரும் அவ்வாறே செய்து கொடுக்க, அவர்கள் இருவரும் அந்த எலிக்குட்டியைத் தங்கள் மகளாக வளர்த்தனர். அவளும் வளர்ந்து திருமண வயதை அடைந்தாள். அப்போது ஒரு நாள் இரவு அவள் நிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மிக அழகான அந்த நிலவை அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவள் தன் தந்தையிடம் சென்று, தன்னை அந்த நிலவுக்குத் திருமணம் செய்து வைக்கும்படிக் கூறினாள். "நிலவு மிகவும் சக்தி வாய்ந்ததாகத் தெரிகிறது; இரவில் இந்த உலகத்திற்கு ஒளி தரும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக இருப்பதால், நான் நிலாவையே திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்றாள். 



         "அப்படியெனில் நீ நிலாவிடமே சென்று கேள்." என்றார். அவளும் நிலாவிடம் சென்று, "இந்த உலகிலேயே நீங்கள் தான் சக்தி வாய்ந்தவராகத் தெரிகிறீர்கள். சரியா?" என்றாள். அதற்கு நிலாவோ, "எனக்கு வெளிச்சம் தருவதே சூரியன் தான். அவர் தான் என்னைவிட சக்தி வாய்ந்தவர்" என்றது. அந்தப் பெண் குழப்பம் அடைந்தாள்; நேராகச் சூரியனிடம் சென்று, "இந்த உலகிலேயே நீங்கள் தான் சக்தி வாய்ந்தவர் என்கிறார்கள். சரியா?" என்று கேட்டாள். அதற்கு சூரியனோ "எனது ஒளியும் வெப்பமும் நிறைந்த கதிர்களை மேகங்கள் மறைத்து விடுகின்றன; மேகங்கள் தான் என்னை விட சக்தி வாய்ந்தவை" என்றார்.




           அந்தப் பெண் மேகத்திடம் சென்று, "சூரியனை விட நீங்கள் சக்தி வாய்ந்தவரா?" என்று கேட்டாள். மேகமோ, "அது ஒரு விதத்தில் தான் சரி. ஏனென்றால் காற்றடித்தால் நான் பஞ்சு போல் பிரிந்து விடுகிறேன். என்னை விடக் காற்று தான் சக்தி வாய்ந்தது." என்றது. 




      பிறகு அந்தப் பெண் காற்றிடம் சென்று, "தாங்கள் மேகத்தை விட சக்தி வாய்ந்தவரா?" என்று குழப்பத்துடன் கேட்டாள். அதற்குக் காற்று, "நான் சக்தி வாய்ந்தவன் தான்; ஆனால் என் பலத்தை மலைகள் எதிர்த்து நிற்கின்றன. மலைகளே என்னை விட சக்தி வாய்ந்தவை." என்றது. பிறகு அவள் மலையிடம் சென்றாள். (சின்னப் பெண் தானே! ஆர்வக் கோளாறு வேறு.) "மலையே! நீங்கள் காற்றை விட பலமானவரா?" என்றாள். அதற்கு மலை சொன்ன பதில் தான் twist! "நான் சக்தி வாய்ந்தவன் தான். ஆனால் என் பலத்தைக் குறைப்பதற்கென்றே சில....
.
.
.
.
.
எலிகள் என் அடிவாரத்தில் இருக்கின்றன. எனக்கென்னவோ அந்த எலிகள் தான் சவாலாகவே இருக்கின்றன." என்று புலம்பியது. :-)




அவள் மலையடிவாரத்திற்குச் சென்றாள். அங்கே எலிகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவள் உடனே தன் தந்தையிடம் சென்று, "அப்பா! இந்த உலகிலேயே சக்தி வாய்ந்தவை எலிகள்தான் என்று தோன்றுகிறது. என்னை ஒரு எலிக்கே திருமணம் செய்து வைத்து விடுங்கள்; மேலும் என்னையும் ஒரு எலியாக மாற்றி விடுங்கள். அப்போதுதான் நான் மகிழ்ச்சியுடன் இருப்பேன்." என்றாள்.

நம்ம கதை :-)

          முனிவருக்கும் அவர் மனைவிக்கும் அப்போது தான் இறைவனின் திருவிளையாடலே புரிந்தது. அவர் படைத்த எந்த ஒரு விஷயத்தையும் மனிதனால் மாற்ற முடியாது என்பதை உணர்ந்தவர்களாக, தங்கள் மகளை மீண்டும் எலியாக மாற்றினார்கள்.


     And they lived happily forever!

#சிறுகதை  #இறைவன்படைப்பு  #ஆண்டவன்கட்டளை #இயற்கை

நமது வலைப்பக்கத்தின் ஐம்பதாவது பதிவு இது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Friday, May 4, 2018

திருசெந்தூர்.

           முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்று திருசெந்தூர். அதன் முந்தைய பெயர் 'சீரலைவாய்' அல்லது 'திருச்சீரலைவாய்'. 'சீரான அலைகள் உருவாகும் கடலை வாசலாகக் கொண்ட ஊர்' என்பது தான் இதன் அர்த்தம். இது ஒரு கடல் சார்ந்த இடம்.

திருச்சீரலைவாய் 

              முருகப் பெருமான் சூரன் என்ற அசுரனைப் போரிட்டு அழிப்பதற்காக, ஒரு போர்வீரனாக, படைத்தளபதியாக, இந்த ஊரில் இருந்துதான் புறப்பட்டுச் சென்றார். வீரத்துடனும், நெற்றியில் செந்தூரத்துடனும் காட்சி தந்ததால் அவர் 'செந்தில் குமரன்' என்று அழைக்கப் பட்டார். அதன் காரணமாகவே இந்த ஊர் 'செந்தூர்' அல்லது 'திருச்செந்தூர்' என்று அழைக்கப் படுகிறது.

போர்க்கோலத்தில் திருசெந்தூர் முருகன் 

             கடலின் சீற்றமான 'சுனாமி' க்குத் தமிழில் 'கடல் கோள்' என்று பெயர். அதாவது, கடல் நிலத்தினைக் 'கொள்ளுதல்' அல்லது 'தனக்காக எடுத்துக் கொள்வது' என்று பொருள். இது வரை தமிழகத்தில் நடந்த அத்தனை கடல் கோள் (சுனாமி) களிலும் திருசெந்தூர் மட்டும் பாதிக்கப்படாமல் இருந்து வந்துள்ளது. (2004 ஆம் ஆண்டு சுனாமியிலும் திருசெந்தூர் மட்டுமே பாதுகாப்பாக இருந்த கடற்கரை நகரமாகும்.)

திருசெந்தூர் கோவில் 

                  கடலுக்குள் என்ன நடந்தாலும் இந்த ஊரில் மட்டும் கடல் அலைகள் ஆட்டம் காணாமல் சீராகவே இருக்கும் என்பதை அறிந்து, தமிழ் அறிஞர்கள் இந்த ஊருக்கு 'சீரலைவாய்' என்று பெயர் கொடுத்திருக்கிறார்கள். இது தான் தமிழ் நாகரீகத்தின் (தீர்க்க தரிசனம்) காலக் கணிப்பு!

#திருசெந்தூர் #திருச்சீரலைவாய் #சீரலைவாய் #சுனாமி
#முருகன் #தீர்க்கதரிசனம் #காலக்கணிப்பு #தமிழ்நாகரீகம் 
#Thiruchendur #Murugan #Tsunami



Friday, January 5, 2018

தமிழ்நாட்டில் - அரசியலும் கலைத்துறையும்.

                   தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அரசியலுக்கு வருவது புதிது அல்ல. மிகப் பெரும்பான்மையான மக்களால்ஏற்றுக் கொள்ளப்பட்டு, வெற்றிகரமான அரசியல் வாழ்வை நடத்தி, நம்மை வழிநடத்திய தலைவர்களை நாம் கண்டிருக்கிறோம்.
              கலைத்துறை, திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் காரணம் என்ன? சுதந்திரப் போராட்டக் காலத்தில் மக்களிடையே விழிப்புணர்வை உருவாக்கவும், நாட்டுப்பற்றை வளர்க்கவும் உதவியவை தெருக்கூத்துக்களும் நாடகங்களுமே. திரு. பம்மல் சம்பந்த முதலியார், திரு. அவ்வைசண்முகம், டி.கே.எஸ் சகோதரர்கள் போன்றவர்களால் நடத்தப்பட்ட நாட்டுப்பற்று நாடகங்கள், மற்றும் பல தெருக்கூத்துக் கலைஞர்களால் நடத்தப்பட்ட வீதிநாடகங்கள் தான் அன்றைய மக்களின் விழிப்புணர்வுக்குக் காரணமாக இருந்தன.
வள்ளி திருமணம் நாடகம்
                 அந்தக் காலகட்டத்தில் நாடகங்கள் நடக்கும் இடங்களுக்கே காவல் துறை அதிகாரிகள் வருவார்கள். நடிகர்களையும் நாடக ஆசிரியர்களையும் கைது செய்து கொண்டு செல்வார்கள்; சிறையில் அடைப்பார்கள். நாடகக் கலைஞர்கள் தண்டனை முடிந்து வெளியில் வந்து மீண்டும் நாடகம் போடுவார்கள்.
நாடகம்
            அதனால் மக்களுக்கு நாடகக் கலைஞர்களின் மீது நிறைந்த அபிமானமும் நன்றியுணர்வும் இருந்தது. பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., ஆகியோர் நாடகத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள். கலைத்துறையின் மீது மக்களுக்கு இருந்த மதிப்பு, மரியாதையின் காரணமாகவும், நம்பிக்கையின் காரணமாகவும் இவர்கள் அனைவரும் தங்குதடையின்றி மக்களால் மனதார ஏற்றுக் கொள்ளப் பட்டு, தலைவர்களாக மதிக்கப்பட்டார்கள். மேலும் அவர்களின் வழிவந்த வாரிசுகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறார்கள். மற்றபடி, தமிழர்களைப் பற்றி வரும் சில மோசமான விமர்சனங்கள் நம்மை நாமே குறைத்து மதிப்பீடு செய்ய வைக்கின்றன. காரணமின்றி நம் தமிழினம் எவர் ஒருவரையும் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளவில்லை (இதுவரை).
             இன்றும் அரசியலுக்கு வரும் நடிகர்கள் இருக்கிறார்கள். அவர்கள் நமக்காக என்ன செய்தார்கள்? மாநில, தேசிய நலனில் அவர்களின் அக்கறை, அவர்களின் சமூக மற்றும் அரசியல் கொள்கைகள் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்து தீர்மானித்து அவர்களை ஏற்றுக் கொள்வதைப் பற்றி யோசிப்பதே நல்லது. தேவையற்ற கேலி, கிண்டல் போக்குகளை விடுத்து, தரமான விமர்சனங்களை அவர்களின் முன் வைப்பதும் வாக்காளர்களாகிய, மக்களாகிய நமது கடமை.
#தமிழகஅரசியல் #கலைத்துறை #நாடகங்கள் #சுதந்திரப்போராட்டம் 

Wednesday, April 13, 2016

துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 


தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

         அனைவருக்கும் பூந்தோட்டத்தின் துன்முகி (துர்முகி) வருடத் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வியாழக்கிழமை பிறக்கும் இந்த ஆண்டு  குரு அருளும் திரு அருளும் பெற்ற சிறந்த ஆண்டாக இருக்க இறைவனின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். இந்த ஆண்டின் ராஜாவாக சுக்கிரன் இருப்பதால் விவசாயிகளுக்குப் பொன்னான ஆண்டாகவும், மந்திரியாகவும் சேனாதிபதியாகவும் புதன் பதவி வகிக்கப் போவதால் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் நல்ல ஆண்டாகவும் இருக்கும். சுபம்!

#துன்முகி #துர்முகி #புத்தாண்டுவாழ்த்துக்கள்

Monday, March 21, 2016

நூல் அறிமுகம் மற்றும் மதிப்புரை



புத்தகத்தின் பெயர் : அறிவியல் பூர்வமான இந்து சமயம்.

ஆசிரியர்                      :  Er. N. P. A. ரவி, சேலம்.


       
             'அறிவியல் பூர்வமான இந்து சமயம்' ஒரு ஆய்வு நூல். இந்தப் புத்தகம் இந்து மதக் கோட்பாடுகளை அணுவியல் (Atomic Science) அடிப்படையில் ஆராய்ந்து, தக்க உருவகங்களுடன் ஒருங்கிணைத்து எழுதப்பட்ட நூலாகும். இந்து சமயத்தின் முதன்மைக் கடவுள்களான பிரம்மா, மகாவிஷ்ணு மற்றும் சிவபெருமான் ஆகிய கடவுள்களை முறையே புரோட்டான் (Proton), நியூட்ரான் (Neutron) மற்றும் எலெக்ட்ரான் (Electron) ஆகிய அணுக்கூறுகளாக (Subatomic Particles) ஆய்ந்தறிந்து கூறியிருக்கிறார். அதற்கான விளக்கங்கள் மற்றும் அறிவியல் பலுக்கல்களைப்  (Scientific Interpretations) புத்தகத்தில் தெளிவாகக் கூறியிருக்கிறார். இந்த மூன்று பெரும் கடவுள்களின் துணைவிகளாகிய சரஸ்வதி, மகாலட்சுமி மற்றும் பார்வதி ஆகிய கடவுள்களும் அணுவியல் கோட்பாடுகளின் மற்ற அம்சங்கள் என்பதையும் புத்தகம் விளக்குகிறது. இந்துக்கள் வணங்கும் பிற தெய்வங்களாகிய விநாயகர், முருகர், ஆஞ்சநேயர் மற்றும் ஐயப்பன் ஆகிய கடவுள்களுக்கான அணுவியல் விளக்கங்களும் அவற்றை ஆசிரியர் கையாண்டிருக்கும் முறையும் ஆச்சரியப்பட வைக்கின்றன.
                     
                 'இந்து' என்ற பெயர் வானவியல் அடிப்படையில் நிலவினைக் குறிக்கிறது என்பதையும் இந்துக்கள் அனைவரும் நிலவு என்னும் ஒரே அன்னையின் பிள்ளைகள் என்பதையும் இந்தப் புத்தகம் சுட்டிக் காட்டியிருக்கிறது. அந்த விதத்தில் சகோதரத்துவத் தத்துவம் இந்து மதத்தின் அடிப்படைக் கட்டமைப்பு என்பது உலகிற்குச் சொல்லப் பட்டுள்ளது. 

                         திருப்பதி திருமலைக் கோவிலின் வரலாறு, அந்த வரலாற்றின் அறிவியல் அர்த்தம் ஆகியவை நூலில் அற்புதமாகக் கூறப்பட்டுள்ளன. அவை திருப்பதி தேவஸ்தானத்தினரால் தகுந்த வல்லுனர்களைக் கொண்டு பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டும் இவ் ஆய்வு நூலினை 1௦௦௦ பிரதிகள் என்ற எண்ணிக்கையில் அச்சிட நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

                       இந்நூலில் சிதம்பரம் கோவிலின் வரலாறு, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் அனைத்தும் விளக்கப் பட்டுள்ளன. தமிழில் இப்படி ஒரு ஆய்வு நூல் வெளியாகி இந்து சமயத்தின் அணுவியல் கருத்துக்கள் தமிழில் பதிவாகி இருப்பது அற்புதம். 

                        நூலின் ஆசிரியர் ஒரு கட்டிடப் பொறியாளர். ஆய்வு நூல் என்பதால் ஆசிரியர் 'அறிமுக எழுத்தாளர்' என்கிற வட்டத்திற்குள் வரவில்லை. அறிவியல் அறிக்கை போல் இல்லாமல் சாதாரண உரைநடையாகவே புத்தகம் படிக்க சுவாரசியமாகச் செல்கிறது. 


#இந்துமதம் #இந்துமதத்தில்அறிவியல் #அணுவியல்


Monday, November 23, 2015

பாரதியா? வாலியா?

 


இந்த இரு வேறு கவிஞர்கள் எழுதிய, பெரும் வெற்றியடைந்த இரு வேறு பாடல்களைக் கேட்கும் போது ஒரு விஷயம் சிந்திக்க வைக்கிறது. முதலில் பாரதி: 

"விசையுறு பந்தினைப் போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்."
மனம் நினைத்த வேகத்தில், நினைத்த விஷயத்தை உடல் செய்து விட வேண்டும் என்கிறார்.

    கவிஞர் வாலி தனது "கண் போன போக்கிலே கால் போகலாமா?" என்ற பாடலில்
                             "மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?

மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?"
மனம் நினைத்ததையெல்லாம் மனிதன் செய்தால் என்ன ஆகும்? தோல்வி, வேதனை தான் மிஞ்சும் என்கிறார். எது சரி என்று தெரியவில்லை. கால நிலைக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப இந்த இரண்டு கவிஞர்களும் எழுதியிருக்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். #வாலி #பாரதியார் .



Saturday, September 19, 2015

உள்ளூர் பெண்ணும் வெளியூர் மண்ணும் ஆகாது!

     இன்று மக்கள் சேமிப்பை விட முதலீடுகளில் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். Investment Solutions என்ற பெயரில் எந்த விதமான முதலீடுகளை ஒருவர் மேற்கொள்ளலாம் என்ற அறிவுரைகள் கூறப்படுகின்றன. அனால் நமது வாழ்வியலில் முதலீடு பற்றிய அறிவுரைகள் தினசரி உபயோகப்படுத்தும் பழமொழிகளில் கூறப்படுகின்றன. "உள்ளூர் பெண்ணும் வெளியூர் மண்ணும் ஆகாது"  என்று என் தாத்தா அடிக்கடி கூறுவார். இதற்கு அர்த்தம் என்று அவர் கூறியது இது தான்: உள்ளூரில் பெண் எடுத்தால் குடும்பத்தில் சண்டை, சச்சரவு என்று வரும் பொழுது உடனேயே அருகில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று விடுவாளாம். மேலும் உள்ளூர் என்பதால் அவள் சண்டை போட்டுக் கொண்டு தாய் வீடு சென்றது அனைவருக்கும் தெரிந்து விடுமாம். அதுவே வெளியூரில் இருந்து எடுத்த பெண்ணாக இருந்தால் அவ்வளவு சுலபமாக தூரத்தில் இருக்கும் தாய் வீட்டிற்குச் செல்ல முடியாது; துணை யாரும் இன்றி பெண்கள் வெகு தூரம் பயணம் செய்ய பயப்படுவார்கள். அதனால் பிரச்சனைகளை அனுசரித்துக் கொண்டு கணவன் வீட்டிலேயே இருப்பார்கள். அதனால் உள்ளூரில் பெண் எடுப்பதை விட வெளியூரில் பெண் எடுப்பதே சரியானது.

மண்ணும் பெண்ணும் 

             அடுத்து, வெளியூர் மண் (நிலம்) என் வேண்டாம்? வெளியூரில் நிலம் வாங்கினால் அது நம்முடைய பராமரிப்பும் கண்காணிப்பும் இல்லாமல் இருக்க நேரிடும். வெளியூர் நிலத்தைப் பராமரிக்க நாம் வேறு யாருடைய உதவியையாவது கேட்க வேண்டி இருக்கும். அந்த நிலத்தினால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைக்காமல் போவதற்கும், சில பிரச்சனைகளை சந்திப்பதற்கும் வேண்டி வரலாம். அதனால் தான் வெளியூரில் நிலம் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். 

             "உள்ளுரில் பெண்ணும் வெளியூரில் மண்ணும் ஆகாது" என்பது சரியான அறிவுரை தானே!


#அறிவுரை #பழமொழி 

Wednesday, December 10, 2014

மதியும் நிம்மதியும்

            நிவாஸம் என்றால் நிரந்தரமான வாஸம்; அதாவது நிரந்தரமாக ஒரு இடத்தில் வசிப்பது. வீடுகளுக்குப் பெயர் வைக்கும் போது 'நிவாஸம்' என்று பெயர் வைப்பதைப் பார்த்திருக்கிறோம். (உ-ம்: 'ஆனந்த நிவாஸம்'). திருப்பதி ஏழுமலையானுக்கு 'ஸ்ரீநிவாசன்' என்று பெயர். 'ஸ்ரீ'யாகிய மகாலட்சுமி நிரந்தர வாசம் செய்யும் இடம் ஏழுமலையானிடம் தான். அதனால் தான் அந்தப் பெயர். 'நி' என்பது 'நிரந்தரம்' என்பதன் சுருக்கமே.

ஏழுமலையான் - ஸ்ரீநிவாசன் 

           அப்படிஎன்றால் 'நிம்மதி' என்பதற்கு 'நிரந்தரமான மதி' என்று அர்த்தம் எடுத்துக் கொள்ளலாமா? மதியூகத்துடன் (அறிவுடன்) எப்போதும் இருந்து வாழ்க்கையைப் புரிந்து கொண்டால் நிம்மதியாக இருக்கலாம். இங்கே அறிவு என்பது வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் அறிவு; அந்த அறிவு நிரந்தரமாக இருக்கும் இடத்தில் நிம்மதி இருக்கும்.
#திருப்பதி #ஏழுமலையான் #நிம்மதி 

Tuesday, November 11, 2014

அக்ஷய திரிதியை என்றால் என்ன?


                ஒவ்வொரு தமிழ் வருடம் சித்திரை மாதமும் நகைக் கடைகளால் அடையாளம் காட்டப்படும் திருநாள் தான் அக்ஷய திரிதியை. நகைக் கடைகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு தள்ளுபடிகள், பரிசுகள், இலவசங்கள் என்று அள்ளி அள்ளித் தருவதாக  விளம்பரப் படுத்திக் கலகலத்துக் கொண்டாடிவிடும். உண்மையில் இந்த அக்ஷய திரிதியை என்றால் என்ன? தங்கத்திற்கும் இந்த தினத்திற்கும் என்ன சம்பந்தம்? அக்ஷய திரிதியையில் பொன் வாங்கினால் செல்வம் பெருகுமா? சங்கடங்கள் தீருமா?


அருள் தரும் திருமகள் 


            இந்த நாளைப் பற்றிப் புராண, இதிகாச மேற்கோள்கள் பல உண்டு,  பரசுராமர் அவதரித்த தினம், மகாபாரதத்தில் யுதிஷ்டிரன் அக்ஷய பாத்திரம் பெற்ற தினம், பாற்கடலில் மகாலட்சுமி அவதரித்து, மகாவிஷ்ணுவை அடைந்த தினம் என்று பல மேற்கோள்கள். சரி... இந்த அக்ஷய திரிதியைக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? 

திரிதியை நிலவு 
                   இந்த வார்த்தையைப் பிரித்துப் பார்த்தால் பொருள் அறியலாம். 'க்ஷய' என்றால் 'தேய்கிற' என்று பொருள். 'அக்ஷய' என்பது அதன் எதிர்ப் பதம். அதாவது, 'வளர்கிற' என்று பொருள். நமது முந்தைய பதிவு ஒன்றில் திதிகள் பற்றிப் பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வரக்கூடிய மூன்றாவது திதி திரிதியை திதி. 'அக்ஷய திரிதியை' என்றால் 'வளர்பிறைத் திரிதியை' என்பது மட்டுமே சாஸ்திரங்கள் கொடுக்கும் விளக்கம். பொதுவாகவே மூன்றாம் பிறையான திரிதியை திதி நல்ல நாளாக மக்களால் பார்க்கப் படுகிறது; ஆகவே அந்தக் காலத்தில் வருடத்தின் முதல் மாதமான சித்திரையின் வளர்பிறை மூன்றாம் நாளில் புதுக்கணக்கை ஆரம்பிப்பதோ தானியங்கள் வாங்குவதோ செய்யப்பட்டிருக்கலாம். மேலும் வேறு ஏதேனும் வாங்குவதும் அந்த நாளில் செய்யப்பட்டிருக்கும்; அதனால் ஒரு துவக்கத்தின் அடையாளமாகவே சித்திரை வளர்பிறை மூன்றாம் நாள் பார்க்கபட்டிருக்கலாம். அதுவே தொடர்ந்தும் இருக்கலாம். தங்கம் மட்டுமே இப்போது விளம்பரமும் வியாபாரமும் படுத்தப் படுகிறது.

அக்ஷய திரிதியை விற்பனை 

              இந்த நாளில் தான தருமங்கள் செய்வது நல்லது என்பதும் உண்மை; அது ஏனோ பிரபலமாகவில்லை. முனிவர்கள் யாகங்கள் செய்ய ஆரம்பிக்கத் தேர்ந்தெடுப்பதும் இந்த நாளைத்தான். இந்த நாளில் இறைவனின் அருளைப் பெற வேண்டுமானால் தங்கம் வாங்க வேண்டும் என்ற நம்பிக்கை தவறு. தங்கம் வாங்க முடிந்தவர்களுக்கு ஒரு விதமான அருளையும் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு விதமான அருளையும் இறைவன் வழங்குவதில்லை; அவன் அருள் அந்த வானத்தைப் போன்று அனைவருக்கும் பொதுவானது.
#அக்ஷய திரிதியை #தங்கம்

Wednesday, September 24, 2014

பல்லாங்குழி விளையாட்டும் Quantity Analysis-உம்.... A Mind Game!

       பல்லாங்குழி விளையாட்டைப் பத்தி நம்மள்ள நிறைய பேருக்குத் தெரியும். பலர் விளையாடியும் இருப்போம். இது சங்க கால விளையாட்டுகள்ல ஒன்னு. குறிப்பாகப் பெண்கள் விளையாடுவதற்காக உருவாக்கப்பட்ட விளையாட்டு இது. இளவயதுப் பெண்கள் பல்லாங்குழி விளையாடும்படி ஊக்குவிக்கப் பட்டிருக்கிறார்கள். இன்றும் நகரங்களிலும், கிராமங்களிலும் நிறைய இடங்களில் சிறுமிகள் பல்லாங்குழி விளையாடுகிறார்கள்.

பல்லாங்குழி விளையாடும் சிறுமிகள்
          பல்லாங்குழிப் பலகையில்  இரண்டு வரிசைகளில் குழிகள் போன்ற அமைப்புகள் இருக்கும். ஒவ்வொரு  வரிசையிலும் ஏழு அல்லது ஒன்பது குழிகள் இருக்கும். சோழிகள் அல்லது புளியங்கொட்டைகளை ஒரே எண்ணிக்கையில் அந்தக் குழிகளில் நிரப்பி விளையாட்டை ஆரம்பிப்பார்கள். ஒவ்வொரு குழியிலும் இருக்கும் சோழிகளை அள்ளி மீதமிருக்கும் குழிகளில், குழிக்கு ஒன்றாக வரிசையாகப் போட்டுக் கொண்டே வருவார்கள். எந்தக் குழியில் இருந்து எடுத்து விளையாடுவது என்பதில் தான் ஆடுபவரின் புத்திசாலித்தனமும் வெற்றியும் இருக்கிறது.

பல்லாங்குழிப் பலகை
                சோழிகள் தீரும் குழிக்கு அடுத்த குழியில் இருந்து மீண்டும் சோழிகளை எடுத்து விளையாடுவதன் மூலம் ஆட்டம் தொடரும். சோழிகள் முடியும் குழிக்கு அடுத்த குழி காலியான குழியாக இருந்தால், காலியான குழிக்கு அடுத்த குழியில் இருக்கும் அனைத்து சோழிகளையும் ஆடுபவர் எடுத்துத் தன்னுடைய லாபக் கணக்கில் வைத்துக் கொள்ளலாம். ஆட்டம் முடியும் போது யாருடைய லாபக் கணக்கில் அதிக சோழிகள் உள்ளனவோ அவரே வெற்றி பெற்றவர். 

           ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் போது குழிகளில் இருக்கும் சோழிகளின் எண்ணிக்கை சரியாகப் புலப்படாது. அதனால் சோழிகளின் எண்ணிக்கையை எண்ணிப் பார்க்காமலேயே கண்ணில் தெரியும் அளவை வைத்தே தெரிந்து கொண்டு குழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது, இந்தக் குழியில் இருக்கும் சோழிகள் இத்தனை குழிகளுக்கு வரும் என்ற அளவு, கண்ணால் பார்த்தே தீர்மானிக்கப் பட வேண்டும். 

பல்லாங்குழியும் Quantity analysis - உம் 

  பெண்கள் தங்கள் பால்யப் பருவத்தில் விளையாடும் இந்த விளையாட்டானது, பிற்காலத்தில் அவர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் போது உதவியாக இருக்கிறது. அதாவது, இவ்வளவு பேருக்கு இவ்வளவு அரிசியைத் தொகுப்பிலிருந்து எடுத்து சமைத்தால் இவ்வளவு சாதம் வரும் என்பதைக் கண்ணால் பார்த்தே தீர்மானிப்பதற்கு உதவுகிறது. மேலும் பந்திகளில் உணவு பரிமாறும் போதும் தொகுப்பிலிருந்து எவ்வளவு சாதம் மற்றும் இதர பதார்த்தங்களை எடுத்துச் சென்றால் ஒரு பந்திக்கு வரும் என்பதைக் கண்ணால் கணக்கிட்டே சரியாகச்  முடியும். இவற்றுக்கான பயிற்சியாகத்தான் பல்லாங்குழி விளையாட்டு, பருவமடைந்த பெண்களுக்கான விளையாட்டாக ஆக்கப் பட்டிருக்கிறது. பல்லாங்குழி என்பது அளவிடுதல் பயிற்சி. It is a Quantity Analysis training. அது ஒரு மன விளையாட்டு. (A Mind Game....)
            

பல்லாங்குழி விளையாடும் ஹர்பஜன்
     இங்கே பல்லாங்குழி விளையாடுபவர்கள் ஹர்பஜன், சேவாக், மற்றும் பலர்....

படங்கள் - நன்றி: www.....
#பாரம்பரிய விளையாட்டுக்கள் #பல்லாங்குழி #mind game #quantity analysis 

Friday, September 5, 2014

Warm or Cold? வரவேற்பு எப்படி?

    ஒவ்வொரு மொழியிலும் இருக்கும் வார்த்தைகளும் வாக்கிய அமைப்புக்களும் (பேச்சு வழக்கு என்று சொல்கிறோமல்லவா? அது) அந்தந்த மொழி பேசப்படும் நாடு அல்லது நிலப் பகுதியின் புவியியல் அமைப்பையும் அங்கு நிலவும் தட்ப வெப்ப நிலையையும் பொறுத்தே அமைகிறது. குளிர் நாடுகளில் வெப்பம் என்பது மகிழ்ச்சி தரும் விஷயமாகவும் வெப்ப நாடுகளில் குளிர்ச்சி என்பது  மகிழ்ச்சி தரும் விஷயமாகவும் இருக்கிறது. சில மொழிகளின் வாக்கிய அமைப்புக்களில் இதனை உணர முடிகிறது.
        குளிர் நாடுகளில் புழக்கத்தில் உள்ள வார்த்தைகள் வெப்ப நாடுகளில் வேறு மாதிரியான அர்த்தத்தைத் தருகின்றன. உதாரணத்திற்கு, ஆங்கிலம் குளிர் நாடான இங்கிலாந்தின் மொழி. அங்கே "அன்பான வரவேற்பு" என்பதை "Warm Welcome" என்கிறார்கள். வார்த்தையில் மட்டுமில்லாமல் பழக்கத்திலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள். கைகளைக் குலுக்குவதில் ஒரு இதமான வெப்பத்தினை வரவேற்கப்படுபவர்களுக்குக் கொடுப்பதன் மூலம் அன்பை வெளிப்படுத்தி வரவேற்கிறார்கள். அதுவே "Warm Welcome"!

Warm Welcome
                 வெப்பப் பிரதேசமான தமிழ் நாட்டில் குளிர்ச்சியே மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். நமது வாக்கிய அமைப்பில் "அகம் குளிர்ந்த வரவேற்பு", "அகமும் முகமும் குளிர வரவேற்கிறோம்" போன்ற வார்த்தைகளைப் பார்க்கிறோம். திருமண மண்டபங்களில் பன்னீர் தெளித்தும், குளிர்ச்சியான சந்தனம் கொடுத்தும் வரவேற்பு கொடுக்கப் படுகிறது. அது "குளிர்ந்த வரவேற்பு"!

குளிர்ந்த வரவேற்பு 

                       இப்போது சொல்லுங்கள்..... Warm or Cold? உங்கள் வரவேற்பு எப்படி?

படங்கள் - நன்றி: www ......!

Friday, August 22, 2014

யோகி, போகி, ரோகி.... யார்?

"ஒரு வேளை உண்பான் யோகி
 இரு வேளை உண்பான் போகி
 மூவேளை உண்பான் ரோகி"
          என்று உணவு உண்ணுதலைப் பற்றி எடுத்துரைக்கிறது சித்த மருத்துவம். 
  ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் யோகமாம்; யோகம் என்பதற்கு 'அதிர்ஷ்டம்' என்ற அர்த்தமும் இருக்கிறது. உணவை ஒரு நாளில் ஒரு வேளை மட்டுமே உண்டு அதிலேயே அப்படியே வாழ முடிந்தவன், வாழத் தெரிந்தவன் யோகி - அதிர்ஷ்டசாலி.
    இரண்டு வேளை சாப்பிடுபவன் போகியாம்; போகம் என்றால் சுகமாக, வசதியாக வாழ்வது. வசதியாக வாழ முடிபவன், வாழ விரும்புகிறவன் இரண்டு வேளை சாப்பிடலாமாம். 
        மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகியாம்; ரோகம் என்றால் நோய். மூன்று வேளை சாப்பிடுபவன் நோயாளியாவான். 

           ஆனால் நாம் டீ, காபி சேர்த்து குறைந்தது ஐந்து வேளை சாப்பிடுகிறோம். 

                     
                        சித்தர்கள் ஜீவ சமாதி அடைந்து விட்டனர்; நல்லவேளை...   

                                                                                                Posted By: Kiruthika Vishnu.
#சித்தர்கள் #யோகி #போகி #ரோகி 

Tuesday, July 1, 2014

அயன்னா சூர்யா... 'அயம்'ன்னா?

           அயம் என்றால் இரும்பு. 'அயன்' என்கிற சொல்லை 'இரும்பு மனிதன்' என்ற அர்த்தத்தில் அந்தத் திரைப்படத்தில் பயன் படுத்தி இருக்கலாம். ('அயன்' என்கிற சொல் கடவுள் பிரம்மாவையும் குறிக்கும்.)

அயன் 

அயம் 

           வெந்தயத்தில் அதிக அளவு இரும்புச் சத்து இருப்பதால் தான் அதற்கு 'வெந்த+அயம்'='வெந்தயம்' என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.
   
வெந்தயம் (Fenugreek)
             கீழே இருக்கும் அட்டவணை வெந்தயத்தில் இருக்கும் தாது உப்புக்களின் பட்டியல்.

வெந்தயம் சத்துப் பட்டியல் 

                   100 கிராம் வெந்தயத்தில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் இரும்புச் சத்தில் 419% இருக்கிறது. அதாவது 20 கிராம் வெந்தயம் மட்டுமே ஒரு நாளைக்குத் தேவையான இரும்புச் சத்தினைக் கொடுத்து விடுகிறது.

                  இங்கிலீஷ்ல 'அயர்ன் மேன்' னா தான் 'இரும்பு மனிதன்'.  தமிழ்ல சின்னதா 'அயன்' னு சொன்னாலே இரும்பு மனிதன் தான்.   
                   
                                                                                         Posted By: Kiruthika Vishnu.
#அயன் #அயம் #வெந்தயம்

Friday, June 27, 2014

சமாதானத்தை அறிவுறுத்தும் போர்க் கடவுள் முருகன்

       இந்து சமய நம்பிக்கையில் முருகனே போர்க் கடவுளாகக் கருதப் படுகிறார். மன்னராட்சிக் காலங்களில் போருக்குப் போகும் வீரர்கள் "வெற்றிவேல்! வீரவேல்!" என்று கோஷமிட்டபடிப் போருக்குக் கிளம்புவார்கள். மனதில் வீரத்தையும் போரில் வெற்றியையும் தருபவர் வேலுடன் இருக்கும் முருகப் பெருமான் என்று நம்பினார்கள். முருகனின் கையில் வேல் இருப்பதே முருகன் போர்க் கடவுள் என்பதால் தான். 
               

வேல் பிடித்திருக்கும் போர்க் கடவுள் முருகன்

                     தமிழர் நாகரிகத்தில் போரின் முடிவு 'சமாதானம்' என்ற நிலையை எட்ட வேண்டும் என்று நினைத்தார்கள். அது போர்க் கடவுளான முருகப் பெருமானின் உருவ அமைப்பிலேயே காட்டப் பட்டிருக்கிறது. முருகனின் காலடியில் என்ன பார்க்கிறோம்? இந்தப் படத்தில் பாருங்கள்!

பாம்பும் மயிலும் அருகருகே 
                             பாம்பும் மயிலும் அருகருகே இருக்கின்றன இல்லையா? பாம்பும் மயிலும் பரம எதிரிகள். மயிலின் முட்டை பாம்புக்கு உணவு - பாம்பு மயிலுக்கு உணவு. எதிரிகள் இரண்டும் முருகனின் காலடியில் பகையை மறந்து ஒற்றுமையாய் நின்று கொண்டிருக்கும் காட்சியைத் தான் நாம் எல்லா முருகன் படங்களிலும் பார்க்கிறோம். அதாவது சண்டையின் முடிவு சமாதானமாக இருக்க வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது. வேறு எந்த மதத்தின் போர்க் கடவுளின் உருவத்திலும் இது போன்ற கோட்பாடு அமைக்கப் படவில்லை.
                          உதாரணத்திற்கு, கீழே இருப்பவை இரண்டும் ரோமானியப் போர்க் கடவுளான மார்ஸ்-இன் (Mars) உருவ அமைப்பு.

மார்ஸ் - ரோமானிய போர்க் கடவுள் 

சமாதானத்தை குறிக்கும் சின்னங்கள் ஏதுமில்லை.
              ரோமானிய மார்ஸ் உருவத்தில் சமாதானத்தைக் குறிக்கும் சின்னங்கள் ஏதும் அமைக்கப் பட வில்லை.
            ஒரு போர்க் கடவுளே சமாதானத்தின் அடையாளமாகவும் இருப்பது தமிழ் இந்து மதத்தில் மட்டுமே. பெருமைக்குரிய விஷயம்தான். புரிஞ்சிக்கலாம்.... 


#முருகன் #போர்க்கடவுள் #சமாதானம் #mars                        
                    

Monday, June 23, 2014

மிருகங்களின் பெண்பால் பெயர்கள்

      மிருகங்களில் பெண்பால் மிருகங்களுக்குத் தனிப் பெயர்கள் இருக்கின்றன. அதையும் கவனிச்சு சரியாச் சொல்லிட்டோம்னா நாம நல்லாவே பேசுறோம்னு அர்த்தம். அதையும் பார்த்துடுவோமா...



              மிருகம்                         ஆண்பால் பெயர்             பெண்பால் பெயர்        

  1.     மாடு                              காளை, எருது                    பசு 
  2.    ஆடு                                கிடா                                      மறி         
  3.    பூனை                            கடுவன்                                பெட்டை 
  4.    கோழி                            சேவல்                                  பேடு/பெட்டை  
  5.    மயில்                            ஆண்மயில்                        பேடு/அளகு (Peahen)
  6.    குரங்கு                          தாட்டான்                             மந்தி 
  7.    அன்னம்                       அகன்றில்/அன்றில்         மகன்றில்/மன்றில் 
  8.    மான்                              கலை                                     பிணை 
  9.    யானை                         களிறு                                    பிளிறு   




      படங்கள் அனைத்தும் நெட் உபயம். சிரமப்பட்டு எடுத்தவர்களுக்கு, தொகுத்தவளின் நன்றிகள்.
#பெண்பால் #பெயர்கள்